சிங்கப்பூரில் கைக்குழந்தைப் பராமரிப்புக்குத் தேவை அதிகரித்துள்ளது. பிறந்து இரண்டு முதல் 17 மாதம் வரை ஆகும் குழந்தைகளைக் கவனித்துக்கொள்வதற்கான தேவை கடந்த ஐந்தாண்டு களில் 66% கூடி இருக்கிறது.
குறிப்பாக பொங்கோல், செங்காங்கில் கைக்குழந்தை மற்றும் சிறார் பராமரிப்பு நிலையங்களுக்கான தேவை 90% அதிகமாகி இருக்கிறது என்று பாலர் பருவ மேம்பாட்டு அமைப்பின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்ததாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டு உள்ளது.
இந்த அமைப்பு, 2023ஆம் ஆண்டுவாக்கில் மேலும் 10,000 புதிய முழுநேர பாலர்பள்ளி இடங்களை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பெரும்பாலும் அந்த இடங்கள், இளம் தம்பதியர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் அமையும்.
மக்கள் செயல் கட்சி சமூக அறநிறுவனம் நடத்தும் 268 முழுநேர சிறார் பராமரிப்பு நிலையங்களில் 177ல் கைக்குழந்தைப் பராமரிப்புச் சேவை கிடைக்கிறது.
அங்கு கைக்குழந்தைகளுக்கு ஏற்ற பாடத்திட்டமும் நடப்பில் இருக்கிறது. திருவாட்டி ஜோதி லட்சுமி ராமகிருஷ்ணன், 40, என்ப வருக்கு கடந்த ஜனவரி மாதம் பெண் குழந்தை பிறந்தது.
அவர் பிரசவத்திற்கு முன்பே தன் குழந்தைக்கு, கைக்குழந்தைப் பராமரிப்பு நிலைய சேவை வேண்டுமென்று முடிவு செய்து பொங்கோலில் தன் வீட்டிற்கு அருகே இருக்கும் இ-பிரிட்ஜ் பாலர்பள்ளி நிலையத்துடன் விடாது தொடர்புகொண்டுவந்தார்.
இடமில்லை என்ற பதிலே அவருக்குக் கிடைத்தது. அந்த மாதின் பெயர் அந்நிலையத்திற்கு மனப்பாடமாகவே ஆகிவிட்டது.
கடைசியாக மே மாதம் அந்த நிலையத்தில் இருந்து திருவாட்டி ஜோதிலட்சுமிக்கு தகவல் வந்தது.
உடனடியாக விரைந்த அவர், அந்த நிலையத்தில் தன்னுடைய நான்கு மாத குழந்தை தியா ஜெலினுக்கு இடத்தைப் பெற்றார்.
மனிதவளத் துறை நிர்வாகியாகப் பணியாற்றும் திருவாட்டி ஜோதிலட்சுமி இந்த விவரங்களை தெரிவித்தார்.
கைக்குழந்தைப் பராமரிப்புச் சேவையை நாடும் இவரைப் போன்ற பெற்றோரின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.

