கி. ஜனார்த்தனன்
உணர்வுகளை வெளிப்படுத்த முடியாமல் தவிக்கும் ஒருவருக்கு வண்ணம் தீட்டுவது இதமளிக்கும் என்று அறிவியல் கல்வியாளர் ஷர்மின் தாஜ், 32, கூறுகிறார்.
சிங்கப்பூர் அறிவியல் நிலையத்தில் கற்றல் நடவடிக்கைகளைத் திட்டமிடுவதுடன் வருகையாளர்களை வரவேற்கும் பணியில் உள்ளார் திருமதி ஷர்மின்.
வாழ்க்கையில் அனைத்தையும் சரிவரச் செய்யவேண்டும் என்ற அழுத்தத்தால் கவலைக்கு உள்ளாகியதாக ஷர்மின் பகிர்ந்துகொண்டார். இதனால் பல நேரங்களில் அவரது கவனம் சிதறியதுடன் உடல் உபாதைகளும் அவருக்கு ஏற்பட்டன.
தமது குடும்பப் பொறுப்புகளுக்கிடையே நேரம் ஒதுக்கி உடற்பயிற்சிக் கூடத்திற்குச் சென்று உடலைக் கட்டாக வைத்திருக்கவும் முயற்சி செய்து வருகிறார்.
இவ்வாறு இருக்க ஒருநாள் தமது பிள்ளைப் பருவ நாள்களை ஷர்மின் நினைவுகூர்ந்தார். அந்தக் காலகட்டத்தில் தாம் வண்ணம் தீட்டிய நினைவுகள் திருமதி ஷர்மினுக்குத் திரும்பின.
பளிச்சிடும் வண்ணங்களை விரும்பும் இந்த இளையர், 'ஹேப்பி கலர்' என்ற வண்ணம் தீட்டும் செயலியைப் பயன்படுத்தத் தொடங்கினார். பிறகு வண்ணச் சாயங்களைப் பயன்படுத்தி காகிதங்களுக்கு வண்ணம் தீட்டினார்.
தமது புதிய பொழுதுபோக்கு குறித்து ஷர்மின் எழுதிய கட்டுரை ஒன்றை இவ்வாண்டு அக்டோபர் 16ஆம் தேதியன்று கல்வி அமைச்சு அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தது.
அதில் 'மனதில் பாரம் இருப்பதை அதிகம் உணர்வோர், வண்ணம் தீட்டும்போது மனஉளைச்சலைத் தற்காலிகமாக மறக்கச் செய்யும் 'ஹார்மோன்'கள் மூளையிலிருந்து சுரக்கின்றன' என்று ஷர்மின் குறிப்பிட்டிருந்தார்.
ஓவியத்தை ஒரு பாடமாகக் கற்பது வேறு, மனநலம் காக்க அதைப் பயில்வது வேறு என்கின்றனர் ஓவிய சிகிச்சை நிபுணர்கள்.
எளிதில் தெரிவிக்க இயலாத உணர்வுகளை, வெளிப்படுத்த வகைசெய்யும் ஓவிய சிகிச்சையை (Art therapy) மேற்கொள்வோரிடம் பதற்ற மனநிலை காலப்போக்கில் குறைவதுடன் சுயவிழிப்புணர்வும் அதிகரிக்கும் என்று அவர்கள் கூறுகின்றனர்.
சிகிச்சையின்போது வரையப்படும் ஓவியங்களின் வழியாக நமக்கே தெரியாத, ஆழ்மன எண்ணங்களையும் அறிந்துகொள்ளலாம் என்று கூறப்படுகிறது.
"அன்புக்குரியவர்களின் இறப்பு, துயர சம்பவத்தால் ஏற்படும் பாதிப்பு, உணவு தொடர்பான மனக் கோளாறுகள், தீய பழக்கங்களுக்கு அடிமையாவது, காதல் தொடர்பான பிரச்சினைகள் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டோர் இதனைச் செய்யலாம்.
"இதுபோன்ற பிரச்சினைகள் இல்லாதவர்களும் தங்களது மனநலம் மேம்பட இதில் ஈடுபடலாம்," என்று சிங்கப்பூர் மனநலச் சங்கத்தைச் சேர்ந்த ஓவியக்கலை சிகிச்சை நிபுணர் திரு மகேஷ் அய்யர் தெரிவித்தார்.
தற்போதைய கிருமிப்பரவல் காலகட்டத்தில் நேரடியாக உரையாடும் வாய்ப்புகள் குறைந்துவிட்டன. இந்தச் சூழலில் வண்ணம் தீட்டும் நடவடிக்கைகள் ஏற்றவை என்று 'இம்பார்ட்' எனப்படும் இளையர்கள் மனநல ஆர்வலர் அமைப்பின் திரு நரசிம்மன் திவாசிக மணி தெரிவித்தார்.
"பிறரைப் பார்க்கக்கூடத் தயங்குபவர்களும் தொடர்ந்து வண்ணம் தீட்டுவதில் ஈடுபட்ட பிறகு மெல்லத் தங்களது உணர்வுகளை வெளிப்படுத்தத் தொடங்குகின்றனர்," என்று திரு நரசிம்மன் குறிப்பிட்டார்.
வண்ணம் தீட்டுவதில் மன அமைதி அடையலாம் என்பதை அனுபவரீதியாக உணருமாறு இந்நடவடிக்கையை ஷர்மின் இளையர்களுக்குப் பரிந்துரை செய்கிறார்.
"நடவடிக்கை ஒரு சில நிமிடமாக இருக்கலாம், பல மணிநேரமும் நீடிக்கலாம். முயன்று பாருங்கள்," என்றார் இவர்.