சிங்கப்பூரில் ஏறத்தாழ 52,000 ஊழியர்கள் இன்னும் கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை என்று மனிதவள அமைச்சு தெரிவித்துள்ளது.
அவர்களில் 6,700 பேர் 60 வயதும் அதற்கும் மேற்பட்டவர்கள் என்றும் அவர்களுக்கு கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்பட்டால் கடுமையான நோய் அல்லது மரணம் ஏற்படும் அபாயம் அதிகம் இருப்பதாகவும் அமைச்சு கூறியது.
அவர்களில் சிலர் மட்டுமே
மருத்துவ அடிப்படையில் தடுப்பூசி போட்டுக்கொள்ளத் தகுதி பெறாதவர்கள். சிங்கப்பூரின் ஊழியரணியில் 98 விழுக்காட்டினர் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளதை அமைச்சு சுட்டியது. இதில் சுய தொழில் செய்பவர்கள் சேர்த்துக்கொள்ளப்படவில்லை.
இம்மாதம் 19ஆம் தேதி நில
வரப்படி 80 விழுக்காடு நிறவனங்களின் ஊழியர்கள் அனைவரும் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். இது மிகவும் பாராட்டிற்குரிய முன்னேற்றம் என்று அமைச்சு தெரிவித்தது.
இம்மாதம் 5ஆம் தேதி நிலவரப்படி 75,000 ஊழியர்கள் தடுப்பூசி போட்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த எண்ணிக்கை குறைந்துள்ளது.
அடுத்த மாதம் 15ஆம் தேதியிலிருந்து தடுப்பூசி போட்டுக்கொள்ளாத ஊழியர்கள் வேலையிடங்
களுக்குச் செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று சுகாதார அமைச்சு நேற்று முன்தினம் அறிவித்தது.
24 மணி நேரத்துக்கு முன்பு கொவிட்-19 பரிசோதனை செய்துகிருமித்தொற்று இல்லை என்று உறுதி செய்துகொண்டாளும் அவர்கள் வேலையிடங்களுக்குச் செல்ல முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
180 நாட்களுக்குள் மருத்துவ அடிப்படையில் தடுப்பூசி போட்டுக்கொள்ளத் தகுதி இல்லாதவர்கள் அல்லது கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்பட்டு அதிலிருந்து குணமடைந்திருந்தால் வேலை
யிடத்துக்குத் திரும்பலாம்.
ஒருமுறை தடுப்பூசி மட்டும் போட்டுக்கொண்ட ஊழியர்கள் வேலையிடத்துக்குத் திரும்பலாம்.
ஆனால் அதற்கு முன்பு அவர்கள் அடுத்த மாதம் 31ஆம் தேதி வரை கொவிட்-19 பரிசோதனை செய்துகொண்டு கிருமித்தொற்று இல்லை என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.
இந்தப் பரிசோதனைக்கான செலவை சம்பந்தப்பட்ட ஊழியர்கள் ஏற்க வேண்டும்.
அடுத்த மாதம் 31ஆம் தேதிக்குப் பிறகு அவர்கள் வேலையிடத்துக்குச் செல்ல வேண்டுமாயின் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டிருக்க வேண்டும்.
வீட்டிலிருந்து வேலை செய்யும் ஊழியர்களில் 50 விழுக்காட்டினர் அடுத்த மாதம் 1ஆம் தேதியிலிருந்து வேலையிடத்துக்குத் திரும்பலாம் என்று இம்மாதம் 14ஆம் தேதியன்று சுகாதார அமைச்சு கூறியது.
கடந்த செப்டம்பர் மாதத்திலிருந்து வீட்டிலிருந்து வேலை செய்யும் அணுகுமுறை வழக்கமானதாக இருந்து வருகிறது.
கொவிட்-19 கிருமித்தொற்றால் பாதிப்படைந்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்ததால் இந்த அணுகுமுறை நடைமுறைப்படுத்தப்பட்டது.
"மிக வேகமாக, எளிதாகப் பரவக்கூடிய ஓமிக்ரான் கொவிட்-19 கிருமி வகை தலைதூக்கியுள்ளது. இது டெல்டா கிருமி வகையைவிட வேகமாகப் பரவக்கூடியது. எனவே, ஓராண்டுக்கு முன்பு இருந்த நிலையைவிட கிருமித்தொற்று ஏற்படும் அபாயம் தற்போது அதிகம்.
"அடுத்த சில மாதங்களில் தடுப்பூசி போட்டுக்கொள்ளாத ஊழியர்கள், குறிப்பாக முதியவர்களுக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டால், அவர்
களால் நமது சுகாதாரப் பராமரிப்புத் துறைக்கு அழுத்தம் ஏற்படும்," என்று மனிதவள அமைச்சு தெரிவித்தது.
"முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட ஊழியரணியால் பாதுகாப்புடன் செயல்பட முடியும். ஊழியர்களின் உயிருக்கு ஏற்படக்கூடிய ஆபத்து குறைவாக இருக்கும். மருத்துவ அடிப்படையில் தடுப்பூசி போட்டுக்கொள்ள முடியாதவர்களைப் பாதுகாக்க நாம் கூடுதல் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்," என்று அமைச்சு கூறியது.
தொடர்ந்து தடுப்பூசி போட்டுக்கொள்ளாமல் இருக்கும் ஊழியர்களை சாத்தியம் இருந்தால் வீட்டிலிருந்து வேலை செய்ய முதலாளிகள் அனுமதிக்கலாம் என்று அமைச்சு தெரிவித்தது.
அல்லது தடுப்பூசி போட்டுக்கொள்ளாத ஊழியர்களைச் சம்பளம் இன்றி விடுப்பில் அனுப்பலாம். இதற்கு இருதரப்பினரின் இணக்கமும் தேவை.
வேறு வழி இல்லை என்றால் மட்டுமே தடுப்பூசி போட்டுக்கொள்ளாத ஊழியர்களை வேலையிலிருந்து நீக்கலாம்.
இத்தகைய பணிநீக்கம் முறையற்றதாக எடுத்துக்கொள்ளப்படாது. ஊழியர்களால் வேலையிடத்துக்குச் சென்று தங்கள் பணியைச் செய்ய முடியாததே இதற்குக் காரணம்.
"பெரும்பாலான ஊழியர்கள் அடிக்கடி வேலையிடம் திரும்பும்போது தடுப்பூசி போட்டுக்கொள்ளாததால் அவ்வாறு செய்ய முடியாத ஊழியர்களின் செயல்பாடு பாதிக்கப்படும்.
"அது தனிநபர் அடிப்படை
யிலும் குழு வேலை அடிப்படையிலும் ஒட்டுமொத்த அளவில் நிறுவனத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்," என்று அமைச்சு கூறியது.
மருத்துவ அடிப்படையில் தடுப்பூசி போட்டுக்கொள்ள முடியாத ஊழியர்களுக்குக் கூடுதல் பாதுகாப்பு வழங்குவது குறித்து முதலாளிகள் பரிசீலனை செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
அவர்கள் தொடர்ந்து வீட்டிலிருந்து வேலை செய்ய ஏற்பாடு செய்யப்படலாம் அல்லது தனியாக இருந்து வேலை செய்யக்கூடிய பொறுப்புகள் தரப்படலாம்.
இன்னும் தடுப்பூசி போட்டுக்கொள்ளாத ஊழியர்களைக் கூடிய விரைவில் தடுப்பூசி போட்டுக்கொள்ள அவர்களது முதலாளிகள் ஊக்குவிக்க வேண்டும் என முத்தரப்புப் பங்காளித்துவம் கேட்டுக்கொள்வதாக அமைச்சு தெரிவித்தது.

