சிங்கப்பூர் நிரந்தரவாசியாவதற்கும் வேலை அனுமதி அட்டைகள், நீண்டகால குடிநுழைவு அட்டைகளுக்கும் விண்ணப்பம் செய்பவர்கள் கட்டாயமாக கொவிட்-19 தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய விதிமுறை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 1ஆம் தேதியிலிருந்து நடப்புக்கு வரும்.
வேலை அனுமதி அட்டையைப் புதுப்பிப்பவர்களும் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும்.
இருப்பினும், 12 வயதும் அதற்கும் குறைவான சிறுவர்களும் மருத்துவ அடிப்படையில் தடுப்பூசி போட்டுக்கொள்ளத் தகுதி பெறாதவர்களும் இதற்கு விதிவிலக்கு.
இந்தப் புதிய விதிமுறை குறித்து கொவிட்-19 கிருமித்தொற்றுக்கு எதிரான அமைச்சுகள்நிலை பணிக்குழு நேற்று முன்தினம் அறிவித்தது.
ஓமிக்ரான் கிருமி வகையை எதிர்கொள்ள எடுக்கப்படும் நட
வடிக்கைகளில் இந்தப் புதிய விதிமுறையும் அடங்கும்.
"சிங்கப்பூரில் தடுப்பூசி
போட்டுக்கொண்டோர் விகிதம் தொடர்ந்து அதிகமாக நீடிக்க புதிய விதிமுறை உதவும். அத்துடன் நமது சமுதாயம் மீண்டும் பழையபடி இயங்கவும் பொருளியலை உயிர்ப்பிக்கவும் இவை கைகொடுக்கும்," என்று பணிக்குழு கூறியது.
விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்படும்போது வேலை அனுமதி அட்டை வைத்திருக்கும் தங்கள் ஊழியர்களும் அவர்களைச் சார்ந்தவர்களும் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் என முதலாளிகள் சத்தியப் பிரமாணம் செய்ய வேண்டும்.
வேலை அனுமதி அட்டை வைத்திருக்கும் ஊழியர்கள் தங்கள் தடுப்பூசி சான்றிதழ்களைச் சமர்ப்பிக்க வேண்டும் அல்லது காட்டவேண்டும்.
மின்னிலக்க ரீதியாக உறுதி செய்யப்படக்கூடிய சான்றிதழ் இருந்தால் அதைக் குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையத்தின் தடுப்பூசி சான்றிதழ் சரிபார்ப்பு இணையவாசலில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
மின்னிலக்க ரீதியாக உறுதி செய்யப்படக்கூடிய சான்றிதழ் இல்லாவிடில், விமானச் சேவை, படகுச் சேவை வழங்கும் நிறு
வனங்கள் ஆகியவற்றில்
பயணம் தொடங்குவதற்கு முன்பு சோதனைச்சாவடியில் ஆவணங் களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
தேவையான ஆவணங்களைச் சமர்ப்பிக்க முடியாதவர்கள் சிங்கப்பூர் வரும் விமானத்துக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள். முன்கூட்டியே அனுமதி பெற்றவர்கள் மட்டுமே இதற்கு விதிவிலக்கு.
வெளிநாடுகளில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் தேசிய தடுப்பூசிப் பதிவகத்தில் உள்ள தங்கள் தடுப்பூசி பதிவில் அதைக் குறிப்பிட வேண்டும்.
அதையடுத்து, பொது சுகாதாரத் தயார்நிலை மருந்தகத்தில் பரிசோதனை செய்து கிருமித்தொற்று இல்லை என்பதை உறுதி செய்ய சிங்கப்பூர் வந்தடைந்ததும் அவர்களுக்கு 30 நாட்கள் கால அவகாசம் வழங்கப்படும்.
கிருமித்தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, சிங்கப்பூரில் அவர்கள் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால் அவர்களது வேலை அனுமதி அட்டைகள் ரத்து செய்யப்படும் என்று பணிக்குழு தெரிவித்தது. வேலை அனுமதி அட்டை வைத்திருப்போரைச் சார்ந்தவர்
களைப் பொறுத்தவரை, 12 வயதுக்குக் குறைவான சிறுவர்களுக்கு இந்தத் தடுப்பூசி தொடர்பான நிபந்தனைகள் பொருந்தாது.