தெம்பனிசில் கடந்த வியாழக் கிழமை நிகழ்ந்த விபத்தில் உயி ரிழந்த ஒரே நபர் 59 வயது திரு கென் வோங்.
ஏறக்குறைய 25 வருட காலம் கலைத் துறையில் அனுபவம் பெற்ற வர். தனது வீட்டில் அவர் கலைப் பாடங்களை நடத்திவந்தார்.
அவரது மாணவர்களில் ஒருவரான டான் கூன் யோங், 67, கொள்ளைநோய் காரணமாக வருமானத்தை இழந்ததால் திரு வோங் தனியார் வாடகைக் காரை ஓட்டி வந்ததாக ஃபேஸ்புக் பதிவில் கூறியிருந்தார்.
அக்டோபர் மாதம் வெளியிட்ட மற்றொரு பதிவில் திரு வோங் கனிவான தன்னலமற்ற ஆசிரியர் என்று திரு டான் குறிப்பிட்டிருந்தார்.
நண்பர் ஒருவர் மூலம் திரு வோங்கின் அறிமுகம் கிடைத்ததும் 2011ல் அவரது மாணவராக டான் மாறினார்.
நேற்று அப்பர் தாம்சனில் உள்ள ஹோலி ஸ்பிரிட் தேவாலயத்தில் திரு வோங்கின் கண்விழிப்புச் சடங்கு நடைபெற்றது. இதில் உற்றார் உறவினர், நண்பர்கள் என சுமார் 30 பேர் கலந்துகொண்டனர்.
பிரார்த்தனைக்குப் பிறகு 12.45 மணியளவில் மண்டாயில் உள்ள தகனச் சாலையை நோக்கி திரு வோங்கின் இறுதி ஊர்வலம் புறப்பட்டது. இதில் பங்கேற்ற ஒருவர், திரு வோங்கின் சகோதரி என்று தன்னை கூறிக்கொண்டார்.
மூதாட்டி ஒருவரை கறுப்புச் சட்டை அணிந்த இரு இளையர்கள் தாங்கிப் பிடித்து அழைத்துச் சென்றனர்.
சென்ற ஞாயிற்றுக்கிழமை கேத்தரின் சுவா என்பவரின் பெயரில் ஃபேஸ்புக்கில் வெளியான காணொளியில் தெம்பனிஸ் அவென்யூ 1 வழியாக வேகமாகச் செல்லும் சிவப்புநிற பென்ஸ் கார், தடுப்புகளைத் தாண்டி வலதுபக்கத்தில் இருந்த வோங்கின் வெள்ளை நிற டயோட்டா கார் மீது மோதுவதைக் காண முடிகிறது.
இந்தக் காணொளியை 'உங்களுடைய பொறுப்பற்ற செயலால் எங்களுடைய நண்பரின் உயிர் பறிபோனது' என்ற தகவலுடன் பலர் சமூக ஊடகங்களில் பகிர்ந்துகொண்டனர்.
நான்கு கார்கள், ஒரு டாக்சி, ஒரு மோட்டார் பைக் ஆகியவை விபத்தில் சிக்கின.
விபத்தில் திரு வோங் தனது இருக்கையில் சிக்கிக்கொண்டார். அப்போது அவருக்கு சுயநினைவு இல்லை என்று சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் மீட்புக் குழுவினர் தெரிவித்தனர்.
சாங்கி பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு திரு வோங் உயிரிழந்தார். சுயநினைவு இழந்த நிலையில் கிடந்த 22 முதல் 38 வயது வரையிலான மேலும் நான்கு பேர் சாங்கி பொது மருத்து வமனையில் சேர்க்கப்பட்டனர்.
சம்பவத்துக்குப் பிறகு ஆபத்தான முறையில் காரை ஓட்டி மரணத்தை ஏற்படுத்தியதாக 33 வயது ஆண் ஓட்டுநர் ஒருவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். அவர் மது அருந்தியிருக்கலாம் என நம்பப்படுகிறது. காவல்துறையின் விசாரணை தொடர்கிறது.

