வீடமைப்பு வளர்ச்சிக் கழக(வீவக) மறுவிற்பனை வீட்டின் விலைகள் எட்டாத உயரத்தில் இருக்கிறதா? அடுத்த ஆண்டு வரை பொறுத்திருந்தால் வீவக மறுவிற்பனை வீடுகளை நல்ல விலைக்கு வாங்க வாய்ப்புள்ளது.
சொத்து விலை அதிகரிப்பை மட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் அண்மையில் அறிவித்துள்ள நடவடிக்கைகள் அதற்கு வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வீவக மறுவிற்பனை வீட்டின் விலைகள் இரட்டை இலக்க வளர்ச்சி கண்டுள்ளது.
ஆனால் அடுத்த ஆண்டில் அந்த வளர்ச்சி 5 முதல் எட்டு விழுக்காடு வரை ஒற்றை இலக்கமாக இருக்கும் என்று குறைந்தது இரண்டு சொத்து நிபுணர்கள் கணித்துள்ளனர்.
தேசிய பல்கலைக்கழகத்தின் சொத்து மற்றும் நகர்ப்புற ஆய்வுக் கழகப் பேராசிரியர் சிங் டியன் ஃபூ, 2022ல் வீட்டை விற்பவர்கள் கேட்கும் தொகைக்கும் வீட்டை வாங்குபவர்கள் கொடுக்க விரும்பும் தொகைக்கும் இடையிலான இடைவெளி குறைந்துவிடும் என்று தமது எதிர்பார்ப்பைத் தெரிவித்துள்ளார்.
"வீட்டை விற்பவர்கள் விற்கப்படும் காலத்தைக் குைறப்பதற்காக அவர்கள் யதார்த்தமான விலையை நிர்ணயிக்கலாம்," என்றார் அவர்.
வீவக வீட்டுக் கடனில் கடனுக்கான மதிப்பின் வரம்பு குறைக்கப்பட்டுள்ளது. இதனால் வீட்டை வாங்குபவர்கள் தங்களுடைய நிதி வரம்புக்குட்பட்டு வீட்டை யதார்த்தமான விலைக்கு வாங்க முயற்சி செய்வார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
இம்மாதம் 16ஆம் தேதி கடன் வாங்குபவர்களின் கடன் செலுத்தும் மொத்த விகிதத்தை அரசாங்கம் கடுமையாக்கியது.
சொத்துச்சந்தையில் வீட்டின் விலைகள் கட்டுக்கடங்காமல் அதிகரித்து திடீரென அடிமட்டத்துக்குச் சரிவதைத் தடுப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.
வீட்டை வாங்குபவர்களும் முன் யோசனையுடன் விவேகத்துடன் செயல்படவும் இது ஊக்குவிக்கிறது. கூடுதல் முத்திரை வரியும் உயர்த்தப்பட்டுள்ளது.
இருந்தாலும் முதல் முறையாக வீடு வாங்கும் சிங்கப்பூரர்களுக்கு வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
ஆனால் ஒரே இரவில் வீடு வாங்குவோருக்கு சாதகமாக நிலைமை மாறிவிடும் எனக் கூற முடியாது என்கிறார் சொத்து நிறுவனமான 'ஆரஞ்ச்டீ அண்ட் டை'யின் ஆய்வு மற்றும் பகுப்பாய்வுப் பிரிவின் மூத்த உதவி தலைவர் கிறிஸ்டீன் சன்.
வீவகவின் தேவைக்கேற்ப கட்டப்படும் வீடுகளின் கட்டுமானம் தொடர்ந்து தாமதமாவதால் தேவைக்கு ஏற்ப வீடுகள் இருக்காது. இதனால் உடனடியாக வீடு வாங்க விரும்புவோர், மறுவிற்பனை வீடுகளை வாங்க முற்படுவார்கள் என்று அவர் கூறினார்.
வீவக, அதன் வீடுகளுக்கு வலுவான தேவை இருப்பதால் 2022 முதல் 2023 வரை ஆண்டுக்கு 23,000 தேவைக்கேற்ப கட்டப்படும் வீடுகளை வெளியிட உறுதி கூறி யுள்ளது.

