சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் ஆண்டுதோறும் வழங்கும் கவியரசு கண்ணதாசன் விருது இவ்வாண்டு எழுத்தாளர், கதாசிரியர், நாடக ஆசிரியர், பாடலாசிரியர் சையத் அஷரத்துல்லாவிற்கு வழங்கப்பட்டுள்ளது.
32 வயதாகும் அவர் பல்கலைக் கழகத்தில் மாணவராக இருந்த காலத்தில் சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரவையில் எழுத்துப் பணிகளில் ஈடு பட்டார். பின்னர் தொலைக்காட்சி, வானொலி நாடகங்களிலும் அவரது எழுத்துப் பணிகள் சிறந்து விளங்கின. திரு அஷரத்துல்லா பாடல்களையும் எழுதியுள்ளார்.
இம்மாதம் 18ஆம் தேதி மாலை மணி 6.00 முதல் இணையத்தில் குவியம் (Zoom) வழியாக நடைபெற்ற கவியரசு கண்ணதாசன் விழாவில் திரு அஷரத்துல்லா விருது பெறுவது அறிவிக்கப்பட்டு அந்தக் காணொளி ஒளியேற்றப்பட்டது.
முன்னதாக சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட முன்னாள் நியமன நாடாளுமன்ற உறுப்பினரும் பெட்ரோலியத் தொழிற்துறையின் ஐக்கியத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளருமான திரு கே கார்த்திகேயனின் அலுவலகத்தில் விருதளிப்பு நிகழ்வு இடம்பெற்றது.
கவியரசரின் சமகாலத்தவரும் மூத்த கவிஞர்களில் ஒருவருமான கவிஞர் முத்துலிங்கம் "கலையுலகக் கம்பன்" எனும் தலைப்பில் கவியரசு கண்ணதாசன் பற்றிச் சிறப்புரை ஆற்றினார்.
தமிழகத்தின் கண்டனூரைச் சேர்ந்த கவிஞர் அரசி பழனியப்பன் கவிதாஞ்சலி படைத்தார்.
கவியரசு கண்ணதாசன் விழாவை ஒட்டி இவ்வாண்டும் கண்ணதாசன் பாட்டுத் திறன் போட்டி இரு பிரிவுகளாக நடத்தப்பட்டது.
இரண்டு பிரிவுகளிலும் முதல் பரிசு வென்றவர்களின் காணொளிகள் விழாவில் ஒளியேற்றம் கண்டன.
அமரர் சுப. அருணாசலம் நினைவு பாடல் எழுதும் போட்டியின் முடிவுகளும் அறிவிக்கப்பட்டு, முதல் பரிசு வென்ற பாடல் இசையமைக்கப்பட்டு நிகழ்ச்சியின்போது ஒலிபரப்பப்பட்டது.