மின்னஞ்சல், குறுந்தகவல், தொலைபேசி அழைப்பு என பல்வேறு வழிகளில் ஆள்மாறாட்டம் செய்து மோசடியில் ஈடுபடும் சம்பவங்கள் சிங்கப்பூரில் அதிகரித்து வருவதை தான் கவனித்து வருவதாக காவல்துறை நேற்று அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.
இணைய வர்த்தகத்தில் தொடர்புடைய நிறுவனங்களின் அதிகாரிகள் என்று கூறி பொதுமக்களிடம் பணம் பறிக்கும் சம்பவங்கள் அவை. இவ்வாண்டு அக்டோபர் தொடங்கி இதுநாள் வரை அத்தகயை 398 மோசடிச் சம்பவங்கள் பதிவாகி இருப்பதாகவும் மோசடி வலையில் சிக்கிய பொதுமக்கள் $4.5 மில்லியன் அளவுக்குப் பறிகொடுத்திருப்பதாகவும் அறிக்கை குறிப்பிட்டது.
இணைய வர்த்தக நிறுவனத்தில் இருந்து பேசுவதாகக் கூறும் மோசடிப் பேர்வழிகள், இணையத்தில் பொருள்கள் வாங்கியதற்காகப் பணம் செலுத்தியதில் பிரச்சினை இருப்பதாகக் கூறுவர்.
அல்லது பெரிய பரிசுத்தொகை விழுந்திருப்பதாக அவர்கள் ஆசை வலைவிரிப்பர்.
பிரச்சினைக்குத் தீர்வுகாண அல்லது பரிசுத்தொகையைப் பெற வங்கிக் கணக்கு விவரங்களை அவர்கள் கேட்பர்.
இணையம் மூலம் வங்கிக் கணக்கைப் பயன்படுத்துவதற்கான உள்நுழைவு ரகசியத் தகவல்கள், கடன்பற்று/ரொக்கக் கழிவு அட்டை விவரங்கள், ஒருமுறை வரும் ரகசியக் குறியீடு (OTP) போன்றவற்றைப் பொதுமக்களிடம் அவர்கள் கேட்டுப் பெறுவர்.
அதுவரை நம்பிய பொதுமக்கள் தங்களது வங்கிக் கணக்கில் முறையற்ற பரிவர்த்தனை நடந்தது பற்றி அறிந்த பின்னரே தாங்கள் மோசடிக்கு ஆளாகியதாக உணர்வர்.
இதுபோன்ற மோசடிகளைத் தவிர்க்க வங்கிக் கணக்கு விவரங்கள், கடன்பற்று/ரொக்கக் கழிவு அட்டை விவரங்கள், ஒருமுறை வரும் ரகசியக் குறியீடு போன்ற எதையும் யாரிடமும் தரக்கூடாது என்று காவல்துறை தெரிவித்து உள்ளது.
சந்தேகம் ஏற்படின் சம்பந்தப்பட்ட வங்கிகளின் அதிகாரபூர்வ இணையத்தளத்திலோ அல்லது அதிகாரிகளிடமோ சரிபார்த்துக்கொள்வது சிறந்தது என்றும் அது யோசனை தெரிவித்துள்ளது.

