கனமான மரப்பலகையும் குளிரூட்டிச் சாதன உதிரிப் பாகங்களை ஏற்றி வந்த மலேசியாவில் பதிவு செய்யப்பட்ட லாரி, துவாஸ் சோதனைச் சாவடி ஆணையத்தில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது, மூன்று கிலோ கிராமுக்கு மேற்பட்ட எடையுள்ள கஞ்சா அதில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
அந்த போதைப் பொருளைக் இம்மாதம் 20ஆம் தேதியன்று கள்ளத்தனமாக சிங்கப்பூருக்குள் கடத்தும் முயற்சியைக் குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணைய (ஐசிஏ) அதிகாரிகள் முறியடித்தனர் என்று ஆணையம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
ஐசிஏ அதிகாரிகள் ஓட்டுநர் இருக்கைக்கு பின்னால் ஒரு கறுப்பு பிளாஸ்டிக் பையுடன் ஒரு கயிற்றுப் பையைக் கண்டுபிடித்தனர்.
பிளாஸ்டிக் பையில் மூன்று பொட்டலங்கள் இருந்தன.
அந்தப் பொட்டலங்கள் ஒவ்வொன்றும் தனித்தனியாக அலுமினியத் தாளில் சுற்றப்பட்டு, பின்னர் பிளாஸ்டிக் தாளில் கட்டப் பட்டிருந்தது.
அந்த மூன்று பொட்டலங்களிலும் மொத்தம் 3,113 கிராம் கஞ்சா மறைத்து வைக்கப்பட்டிருந்தது என்று ஆணையம் கூறியது.
லாரி ஓட்டுநரான 24 வயது மலேசிய ஆடவர் கைது செய்யப்பட்டு, மேல் விசாரணைக்காக மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவிடம் (சிஎன்பி) ஒப்படைக்கப்பட்டார்.
கைப்பற்றப்பட்ட கஞ்சாவின் அளவு, ஒரு வாரத்திற்கு 440 கஞ்சா போதைப் பித்தர்களுக்குப் போதுமானது என்று ஐசிஏ தெரிவித்துஉள்ளது.
போதைப்பொருள் கடத்தல் முயற்சிகளைத் தடுக்க மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவுடன் தொடர்ந்து பணியாற்றுவதாகவும் சிங்கப்பூரின் எல்லைகளில் விரும்பத்தகாத நபர்கள், ஆயுதங்கள், வெடிபொருள்கள் மற்றும் பிற கடத்தல் பொருட்களைக் கடத்தும் முயற்சிகளைத் தடுக்க சோதனைச் சாவடிகளில் பாதுகாப்புச் சோதனைகளை நடத்துவதாகவும் அது கூறியது.
"சிங்கப்பூரின் பாதுகாப்பைக் கட்டிக்காப்பதில் நமது எல்லைகள்தான் எங்களின் முதல் அரணாகும்" என்று குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையம் கூறியது.

