தனது 75 வயது தந்தை தனது வீட்டின் பிரதான படுக்கையறை கழிவறையைப் பயன்படுத்தியதால் அந்த முதியவரை அவரது மகன் தாக்கினார்.
நவம்பர் 10ஆம் தேதி புரிந்த இந்தக் குற்றத்திற்காக 42 வயதான முகம்மது அரிஃபின் தாஜுதினுக்கு நேற்று மூன்று வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. எளிதில் பாதிப்படையக்கூடிய நபருக்கு வேண்டுமென்றே காயத்தை ஏற்படுத்தியதாக அந்த சிங்கப்பூரர் மீது சுமத்தப்பட்ட குற்றத்தை நேற்று அவர் ஒப்புக்கொண்டார்.
திரு தாஜுதின் இப்ராஹிம் எனும் அந்தத் தந்தை தன் மகனுக்கு எதிராக இவ்வாண்டு ஜன வரியில் தனிநபர் பாதுகாப்பு ஆணை பெற்றிருந்தார். இந்த ஆணையை மதிக்காமல் தன் தந்தைக்கு எதிராக செயல்பட்ட அரிஃபினின் செயல் தண்டனை விதிப்பின்போது கருத்தில் கொள்ளப்பட்டது.
சம்பவம் நடந்தபோது, அரிஃபின் பிரதான படுக்கையறையில் தன் தந்தையுடன் இருந்தார். அப்போது அவரது தந்தை அந்த அறையில் உள்ள கழிவறையைப் பயன்படுத்தி விட்டார் என்பதால் அரிஃபின் ஆத்திரமடைந்தார் என்று அரசுத்தரப்பு வழக்கறிஞர் கென்னி யோங் நீதிமன்றத்தில் விவரித்தார்.
"அப்போது அரிஃபின், தந்தையின் கன்னத்தில் தனது வலது கையால் பலமுறை அறைந்தார். படுக்கையில் கிடந்த குளிக்கும் துண்டை எடுத்து அவரது முகத்தில் அடித்தார்," என்றும் திரு யோங் மேலும் தெரிவித்தார்.
இந்தத் தாக்குதலால் திரு தாஜுதின் மூக்கிலும் கண்களிலும் வலி ஏற்பட்டது. ஐந்து நாள் கழித்து, தன் தந்தையைப் பார்க்க வந்த அரிஃபினின் சகோதரி தந்தையின் முகத்தில் காயங்கள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியுற்றார்.
அது பற்றி அரிஃபினிடம் கேட்க, அவர் தந்தையைத் தாக்கியதை ஒப்புக்கொண்டார். அவரது சகோதரி அன்றே காவல்துறையிடம் புகார் அளித்தார்.
தனது சார்பில் வாதாட வழக்கறிஞர் எவரையும் அமர்த்தாத அரிஃபின், வீடியோ-இணைப்பு மூலம் நேற்று நீதிமன்றத்தில் முன்னிலையானார்.
தனது குற்றச்சாட்டு தொடர்பில் அவர் தண்டனை குறைப்பு பற்றி நீதிபதியிடம் அவர் எந்த கோரிக்கையையும் முன் வைக்கவில்லை.
அவரது தண்டனை நவம்பர் 17ஆம் தேதி முதல் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
தண்டனை விதிப்பின்போது மாவட்ட நீதிபதி கெஸ்லர் சோ, அரிஃபின் இனி எக்காரணத்தைக் கொண்டும் தன் தந்தையைத் தாக்கக்கூடாது என்று எச்சரித்தார்.
விடுதலைக்குப் பிறகு அரிஃபின் மனநலக் கழகத்தில் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.
வேண்டுமென்றே காயப்படுத்திய ஒவ்வொரு குற்றத்துக்கும் மூன்று ஆண்டு வரை சிறையும் $5,000 அபராதமும் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

