கொவிட்-19 நெருக்கடிநிலையால் நிச்சயமற்ற சூழல் நிலவுகிறபோதிலும் வாழ்க்கையை முடக்கும் அச்சத்துடன் இருக்கத் தேவையில்லை என்று அதிபர் ஹலிமா யாக்கோப் தமது ஆண்டிறுதிச் செய்தியில் தெரிவித்துள்ளார். நிலைமை மேம்பட்டு வருவதை அவர் சுட்டினார்.
நெருக்கடிநிலையால் ஏற்பட்ட பின்னடைவிலிருந்து சிங்கப்பூரர்களும் நாட்டின் பொருளியலும் மீண்டுவர மீள்திறன் மிகவும் அவசியம் என்றார். அதிபர் ஹலிமாவின் நான்கு நிமிட உரை ஃபேஸ்புக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டது.
இவ்வாண்டு சிங்கப்பூர் எதிர்கொண்ட சவால்களில் சிலவற்றைத் தமது உரையின்போது அதிபர் ஹலிமா கோடிட்டுக் காட்டினார்.
"வழக்கநிலைக்குத் திரும்ப பலர் ஏங்குவது எனக்கு நன்றாகப் புரிகிறது. ஆனால் நிச்சயமற்ற சூழலிருந்து நாம் இன்னும் வெளிவரவில்லை.
"குறிப்பாக, ஓமிக்ரான் கொவிட்-19 கிருமி வகை பற்றி போதிய தகவல் இன்னும் கிடைக்கவில்லை. அது பற்றிய முழு விவரம் நமக்கு இன்னும் தெரியவில்லை.
"இருப்பினும், எல்லாம் முடிந்துவிட்டதாகவும் வாழ்வில் இனிமேல் வழக்கநிலை திரும்பாது என்றும் கருதிவிடக்கூடாது. நிலைமை மேம்பட்டு வருகிறது. நமது வாழ்வை முடக்கும் அச்சத்துடன் நாம் இருக்கத் தேவையில்லை," என்று சிங்கப்பூரர்களுக்கு அதிபர் ஹலிமா நேற்று அழைப்பு விடுத்தார்.
கொவிட்-19 நெருக்கடிநிலையால் பாதிக்கப்பட்டோருக்கு
ஆதரவுக்கரம் நீட்டும் வகையில் நாட்டின் கையிருப்பு பயன்படுத்தப்பட்டது. நாட்டின் நிதி வளம் சிறப்பான முறையில் நிர்வகிக்கப்படுவதாக அதிபர் ஹலிமா தெரிவித்தார்.
"சிங்கப்பூரர்களுக்கும் உள்ளூர் வர்த்தகங்களுக்கும் உதவ கடன் வாங்கும் நிலை நமக்கு ஏற்படவில்லை. பல நாடுகளில் நிகழ்ந்துள்ளதுபோல, அடுத்த
தலைமுறையினருக்குக் கடன் சுமையை நாம் விட்டுச் செல்லவில்லை," என்றார் அதிபர் ஹலிமா.
இதற்கிடையே நாட்டின் தடுப்பூசி போட்டுக்கொண்டோர் விகிதம் குறித்தும் தமது உரையின்போது அதிபர் தெரிவித்தார்.
நேற்றைய நிலவரப்படி
சிங்கப்பூர் மக்கள்தொகையில்
88 விழுக்காட்டினர் தடுப்பூசி
போட்டுக்கொண்டுள்ளதாக அவர் கூறினார். தற்போது சிறாருக்கும் தடுப்பூசி போடப்படுவதை அவர் சுட்டினார்.
இருப்பினும், எவ்வளவுதான் திட்டமிட்டாலும் தயார்நிலையில் இருந்தாலும் கொவிட்-19 கிருமி நம் அனைவரையும் ஆச்சரியப்
படுத்தக்கூடியது என்று அதிபர் ஹலிமா எச்சரிக்கை விடுத்தார்.
"கிருமித்தொற்றின் வீரியம் அதிகரிப்பதற்கும் குறைவதற்குமான காரணத்தை எந்த ஒரு விஞ்ஞானியாலும் சுகாதாரத் துறை நிபுணராலும் நிச்சயமாக முன்னுரைக்கவோ விளக்கம் தரவோ முடியவில்லை.
"கொவிட்-19 கிருமிப் பரவல் பெருமளவிலான பாதிப்பை ஏற்
படுத்தும் என எதிர்பார்க்க வேண்டும்.
"உருமாறிய புதிய கிருமி வகைகளும் இதில் அடங்கும். அத்தகைய சூழலை எதிர்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும்," என்று அதிபர் ஹலிமா தெரிவித்தார்.
சிங்கப்பூரர்களின் ஒருமைப்பாட்டை அவர் வெகுவாகப் பாராட்டினார். அத்துடன், வசதி குறைந்தோருக்கு உதவிய நன்கொடையாளர்கள், தொண்டூழியர்கள், சமூக ஊழியர்கள் ஆகியோருக்கு அவர் புகழாரம் சூட்டினார்.
சுகாதாரப் பராமரிப்புக் கட்டமைப்பும் போக்குவரத்துக் கட்டமைப்பும் தொடர்ந்து சீரான முறையில் இயங்குவதை உறுதி செய்ய பொதுநல உணர்வுடன், அயராது உழைத்த முன்களப் பணியாளர்
களுக்கும் அதிபர் ஹலிமா நன்றி கூறினார்.
"2021ஆம் ஆண்டு ஒரு முடிவுக்கு வருகிறது. இந்த ஆண்டில் நாம் செவ்வனே செய்த பணிகளை நினைத்துப் பார்த்து திருப்தி அடையலாம். புதிய ஆண்டு பல நல்லவற்றைத் தரும் என்ற எதிர்பார்ப்புடன் இருக்க வேண்டும்," என்று அதிபர் ஹலிமா தெரிவித்தார்.