புத்தாண்டு பிறக்கும்போது சிங்கப்பூரில் தொடர்ந்து மழை பொழிந்துகொண்டிருக்கும் சாத்தியம் அதிகம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வியாழக்கிழமை (டிசம்பர் 30) முதல் ஜனவரி மாதம் தொடங்கிய பிறகு சில நாள்கள் வரை மழை தொடர்ந்து பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த வாரம் திங்கட்கிழமை வரை பருவமழை தொடரும் என்று மலேசிய வானிலை பிரிவு கணித்துள்ளது. பல வானிலை முறைகளைக் கொண்டு நடத்தப்பட்ட ஆய்வுகளின்வழி அப்பிரிவு இதனை கணித்தது. இந்த வட்டாரத்தில் ‘மோன்சூன்’ எனப்படும் பருவக்காற்று திடீரென பலமாக வீசும்போது சிங்கப்பூரில் இடியுடன் கூடிய மழை பொழியும். இந்த வேளையில் குளிர் காற்றும் வீசும்.
சிங்கப்பூரில் ஆண்டுதோறும் சராசரியாக இரண்டிலிருந்து நான்கு முறை பருவக்காற்று பலமாக வீசும். பெரும்பாலான வேளைகளில் இந்நிகழ்வு டிசம்பர் மாதத்திற்கும் மார்ச் மாதத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் இடம்பெறும் என்று தேசிய சுற்றுப்புற வாரியத்தின் ‘எம்எஸ்எஸ்’ எனப்படும் சிங்கப்பூர் வானிலை சேவை அமைப்பு அதன் இணையத்தளத்தில் குறிப்பிட்டிருந்தது. இந்தக் காலகட்டத்தில் வடக்கிலிருந்து சிங்கப்பூரின் பக்கம் பலத்த காற்று வீசும்.
இதே காலகட்டத்தில்தான் உலகின் வடக்குப் பகுதியில் உள்ள நாடுகள் குளிர்காலத்தை அனுபவிக்கும். அதனால் வடக்கு ஆசியாவில் அமைந்துள்ள ரஷ்யாவின் சைபீரியா போன்ற பகுதிகளில் குளிர் காற்று வீசும். அந்தக் காற்றில் ஈரத்தன்மை அதிகம் இருக்காது.
அங்கிருந்து வீசும் காற்று இந்தப் பகுதிக்கு வரும்போது அதன் ஈரத்தன்மை அதிகரிக்கும். அதனால் சிங்கப்பூர் உட்பட உலகின் நடுவில் உள்ள ‘இக்குவேட்டர்’ பகுதிக்குமேல் கார்மேகங்கள் உருவாகும். இதனால் சில நாள்களுக்கு மழை பொழிந்த வண்ணம் இருக்கும்.