நிதி அமைச்சர் லாரன்ஸ் வோங் நாடாளுமன்றத்தில் வரும் பிப்ரவரி 18ஆம் தேதி வரவுசெலவுத் திட்டம் 2022ஐ தாக்கல் செய்து உரையாற்றுவார்.
வரவுசெலவுத் திட்டத்தைத் தாக்கல் செய்து அமைச்சர் ஆற்றும் உரை தொலைக்காட்சியிலும் வானொலியிலும் நேரடியாக ஒளி, ஒலிபரப்பாகும் என்று நிதி அமைச்சு நேற்று தெரிவித்தது.
சிங்கப்பூர் வரவுசெலவுத் திட்ட இணையப் பக்கத்திலும் நிதி அமைச்சரின் உரையை நேரடியாகக் காணலாம்.
அமைச்சர் உரையாற்றி முடித்த பிறகு வரவுசெலவுத் திட்ட உரை முழுமையாக அந்த இணையத் தளத்தில் பதிவேற்றப்படும் என்று அமைச்சு தெரிவித்து உள்ளது.
நிதி அமைச்சின் ஃபேஸ்புக் பக்கத்திலும் டுவிட்டரிலும் வரவுசெலவுத் திட்டத்தின் முக்கிய அம்சங்கள் உடனுக்குடன் பதிவேற்றப்படும் என்றும் அவற்றைப் பொதுமக்கள், அமைச்சர் உரையாற்றும் அதே நேரத்தில் தெரிந்துகொள்ளலாம் என்றும் நிதி அமைச்சு மேலும் குறிப்பிட்டு உள்ளது.
இவ்வேளையில், 2022 வரவுசெலவுத் திட்டத்திற்கான யோசனைகள், கருத்துகள், கண்ணோட்டங்கள் பொதுமக்களிடம் இருந்து தொடர்ந்து வரவேற்கப்படுவதாகவும் அமைச்சு தெரிவித்தது.
இணையம் வழி அல்லது ரீச் வரவுசெலவுத் திட்ட கருத்தறியும் ஏற்பாட்டின் மூலம் பல்வேறு யோசனைகளையும் கருத்துகளையும் தெரிவித்து வரும் சிங்கப்பூரர்களுக்கு அமைச்சு நன்றி கூறியது.
மக்கள் 2022 ஜனவரி 17ஆம் தேதி திங்கட்கிழமை வரை ரீச் இணையத்தளம் மூலமாக தொடர்ந்து கருத்துகள், யோசனைகளைத் தாக்கல் செய்யலாம் என்று அமைச்சு தெரிவித்து உள்ளது.
பொதுமக்களின் யோசனைகளை யும் கருத்துகளையும் நாடுவதற்காக மக்கள் கழகம் மற்றும் அதன் அடித்தள அமைப்புகளுடன் பங்காளித்துவ உறவை அமைச்சு ஏற்படுத்திக் கொண்டு உள்ளது.
மக்கள் Ask Kopi Kakis #shareyourviews என்ற மெய்நிகர் தளத்தின் வழி இதில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ளலாம்.
வரவுசெலவுத் திட்ட இணையத்தளம், ரீச் வரவுசெலவுத்திட்ட இணையத்தளம், ரீச் ஃபேஸ்புக், இன்ஸ்டகிராம், #shareyourviews என்ற இணையத்தளம் ஆகியவற்றின் மூலம் மக்கள் கருத்துகள், யோசனைகளைத் தாக்கல் செய்ய முடியும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

