உணவங்காடி நிலையங்களில் ஐந்தில் நான்குக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் உணவருந்தப் பயன்படுத்திய தட்டுகளையும் கரண்டிகளையும் தாங்களே அகற்றுவதாகத் தெரியவந்துள்ளது. உணவங்காடி நிலையங்களில் மேசைகளின் மேல் குப்பை போடுவதைத் தடுக்க கடந்த செப்டம்பர் மாதம் சில விதிமுறைகள் நடப்புக்கு வந்தன. அதற்கு முன்பு இருந்ததைக் காட்டிலும் அதிகமானோர் தட்டுகளையும் கரண்டிகளையும் தாமாகவே அகற்றுகின்றனர்.
"மேசைகளைத் தாங்களே சுத்தமாக வைக்கவேண்டும் என்ற பொறுப்புணர்வு பொதுவாக உணவருந்த வருவோரிடையே கூடுதலாகக் காணப்படுகிறது, அவ்வாறு செய்ய அவர்கள் விரும்புகின்றனர்," என்று நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற மூத்த துணை அமைச்சர் டாக்டர் ஏமி கோர் கூறினார். கங்சா சாலையில் உள்ள சோ டீ பிளேஸ் காப்பிக் கடை, 'ஹில்லியன் மால்' கடைத்தொகுதியில் உள்ள 'கோப்பித்தியாம்' உணவங்காடி நிலையம் ஆகியவற்றுக்குச் சென்றபோது டாக்டர் கோர் செய்தியாளர்களிடம் பேசினார். மேசைகளை சுத்தமாக வைப்பதற்கான விதிமுறைகள் நாளை முதல் காப்பிக் கடைகள், உணவு நிலையங்கள் ஆகியவற்றிலும் நடைமுறைப்படுத்தப்படும்.
புதிய விதிமுறைகளின்படி உணவங்காடி நிலையங்களில் இரண்டாவது முறையாக தட்டுகளையும் கரண்டிகளையும் அகற்றாதோருக்கு 300 வெள்ளி அபராதம் விதிக்கப்படும். அதற்குப் பிறகும் அதே தவற்றை இழைப்போருக்கு 2,000 வெள்ளி அபராதம் விதிக்கப்படும். இந்த விதிமுறைகள் நடப்புக்கு வருவதற்கு முன், மூன்றில் ஒருவர் மட்டுமே உணவங்காடி நிலையங்களில் தாங்கள் பயன்படுத்திய தட்டுகளையும் கரண்டிகளையும் அகற்றினர் எனத் தெரிவிக்கப்பட்டது.
தேசிய சுற்றுப்புற வாரியத்தின்கீழ் 114 உணவங்காடி நிலையங்கள் இயங்குகின்றன. அவற்றில் இதுவரை ஒருவருக்கு மட்டுமே விதிமுறைகளை மீறியதற்காக எழுத்து வடிவில் எச்சரிக்கை வழங்கப்பட்டிருக்கிறது.
சுமார் 400 காப்பிக் கடைகளும் உணவு நிலையங்களும் தட்டுகள் கரண்டிகள் ஆகியவற்றை உரிய இடத்தில் வைப்பதற்கான கூடுதல் வசதிகளை ஏற்படுத்திகொள்ள வகைசெய்யும் தேசிய சுற்றுப்புற வாரியத்தின் உதவித் திட்டத்தைப் பயன்படுத்தியதாக டாக்டர் கோர் தெரிவித்தார். அதன்படி சம்பந்தப்பட்ட வசதிகளைச் செய்து தருவதற்கான செலவில் பாதிக்கு நிதியுதவி வழங்கப்படும். ஒவ்வொரு காப்பிக்கடை அல்லது உணவு நிலையத்திற்கும் அதிகபட்சமாக 2,500 வெள்ளி நிதியுதவி வழங்கப்படும்.

