இலவசமாக சட்ட சேவைகளை வழங்கும் சிங்கப்பூர் சிந்தி சங்கத்தின் புதிய நிலையம் திறக்கப்பட்டுள்ளது. இச்சங்கத்தின் நூறாவது ஆண்டு நிறைவைக் கொண்டாட சமூகத்திற்கு சேவையாற்றும் நோக்குடன் இந்நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
சட்ட சேவைகளுக்கான கட்டணங்களைச் செலுத்த வசதி இல்லாத மக்களுக்கு புதிய நிலையம் உதவும். குறிப்பாக சிந்தி சமூகத்தினர், சிந்தி சங்கம் அமைந்துள்ள காத்தோங், மவுண்ட்பேட்டன் வட்டார வாசிகள் ஆகியோருக்கு உதவி வழங்கப்படும். நிலையத்தில் பணியாற்றும் தொண்டூழியர்களான வழக்கறிஞர்களும் ஆலோசகர்களும் சிந்தி சங்கத்தைச் சேர்ந்தவர்கள்.
'எல்எஸ்பிபிஎஸ்' எனப்படும் சிங்கப்பூர் சட்ட அமைப்பின்கீழ் இலவச சட்ட சேவைகளை வழங்கும் நிலையம், சிந்தி சங்கம் இரண்டும் இணக்கக் குறிப்பிலும் கையெழுத்திட்டன. இந்த ஏற்பாட்டின்கீழ் தன்னிடம் சேவைகளை நாடுவோரை 'எல்எஸ்பிபிஎஸ்' அமைப்பு, சிந்தி சங்கத்தின் இலவச சட்ட சேவை நிலையத்திற்கு அனுப்பலாம்.
சட்ட சேவைகள் மக்களை சென்றடைவது மேம்படுவதால் இந்தப் பங்காளித்துவம் தமக்கு மிகுந்த மனநிறைவைத் தருவதாக இணக்கக் குறிப்பு கையெழுத்தானதை நேரில் கண்ட பிரதமர் அலுவலக அமைச்சர் இந்திராணி ராஜா கூறினார். "தொண்டூழியம், பிறருக்குக் கொடுப்பது, பங்காளித்துவம் ஆகியவை சார்ந்த உணர்வே இலவச சேவையின் மகத்துவத்தை வெளிப்படுத்தும், ஆக்கபூர்வமான வகையில் பலரின் வாழ்க்கையைத் தொடும்," என்று குமாரி ராஜா குறிப்பிட்டார். சட்டம் சார்ந்த தகவல்கள், சேவைகள் ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் தளம் ஒன்றை உருவாக்க, சட்ட அமைச்சும் 'எல்எஸ்பிபிஎஸ்' அமைப்பும் இணைந்து செயல்படுவதாகவும் அவர் சொன்னார்.

