கொவிட்-19 கிருமிப் பரவல் சூழலைக் கையாள்வதற்கான உதவித் திட்டங்கள் கடல்துறை நிறுவனங்களுக்குத் தொடர்ந்து வழங்கப்படும். இம்மாதம்வரை மட்டும் நடப்பில் இருந்த உதவித் திட்டங்கள் அடுத்த ஆண்டு ஜூன் மாதம்வரை நீட்டிக்கப்பட்டுள்ளன.
வட்டார அளவில் படகுகளையும் கப்பல்களையும் இயக்கும் துறைகள் உள்ளிட்டவற்றுக்கு நீட்டிக்கப்பட்டிருக்கும் 'மேரிட்டைம்எஸ்ஜி டுகெதர் பேக்கேஜ்' எனப்படும் ஒன்றிணைந்த கடல்துறை-எஸ்ஜி தொகுப்புத்திட்டம் கைகொடுக்கும். தொடர்ந்து நடப்பில் இருந்துவரும் பயணத் தடைகளாலும் எல்லைக் கட்டுப்பாடுகளாலும் பாதிக்கப்பட்டோருக்கு உதவுவது இத்திட்டத்தின் இலக்கு.
வட்டார அளவில் படகுகளையும் கப்பல்களையும் இயக்கும் நிறுவனங்கள், 'சிங்கப்பூர் குரூஸ் சென்டர்' எனும் சிங்கப்பூர் சொகுசுக் கப்பல், படகுகள் முனையம் ஆகியவற்றுக்கான மூன்று மில்லியன் வெள்ளி மானியம் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கப்படுகிறது. இந்த உதவித் திட்டம் இன்று முடிவுக்கு வரவிருந்தது.
இத்திட்டம் கடந்த ஜூன் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்குக் கடல் பயணங்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளைச் செயல்படுத்த நிதியுதவி வழங்கப்படும். எடுத்துக்காட்டாக, தானா மேரா படகு முனையத்தில் சுத்திகரிப்புப் பணிகளை மேற்கொள்ளும் இயந்திர மனிதர்களை இயக்க சிங்கப்பூர் சொகுசுக் கப்பல், படகுகள் முனையத்திற்கு நிதியுதவி கைகொடுத்தது. தொடர்புகளின் தடமறிய, மின் இருக்கை முறையைச் செயல்படுத்த வட்டார அளவில் படகுகளை இயக்கும் 'பாத்தாம் ஃபாஸ்ட்' நிறுவனமும் நிதியுதவியைப் பயன்படுத்தியது.
சம்பாதிக்கக் கடல் பயணங்களை நம்பியிருக்கும் சிங்கப்பூரர்களுக்கும் தொடர்ந்து ஆதரவு வழங்கப்படுகிறது. எல்லைக் கட்டுப்பாடுகள் உள்ளிட்ட காரணங்களால் கப்பல்களில் வேலை கிடைக்க சிரமப்படுவோருக்கு இதன் மூலம் உதவுவது நோக்கம்.

