வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளில் வசிக்கும் ஏறக்குறைய 950,000 குடும்பங்களுக்கு இந்த மாதம் ஜிஎஸ்டி-பயனீட்டுச் செலவை ஈடுசெய்ய உதவும் பற்றுச்சீட்டு கிடைக்கும்.
கொவிட்-19 சூழலில் குறைந்த, நடுத்தர வருமானக் குடும்பங்களுக்கு உதவும் வகையில் இந்த நிதியாண்டில் இத்துடன் ஆறாவது முறையாக இந்த உதவி வழங்கப்படுகிறது.
தகுதி பெறும் குடும்பங்கள், தங்கள் வீட்டின் அளவுக்கு ஏற்ப, சென்ற ஆண்டு ஏப்ரல், ஜூலை அக்டோபர் மாதங்களில் கட்டணத் தள்ளுபடியைப் பெற்று இருக்கும்.
அவற்றோடு ஏப்ரல், ஜூலையில் அவற்றுக்கு இரண்டு முறை சிறப்பு நிதி உதவியும் கிடைத்தது.
எல்லாவற்றையம் சேர்த்து குடும்பங்களுக்கு மொத்தம் $460 மில்லியன் கொடுக்கப்படுவதாக நிதி அமைச்சு நேற்று தெரிவித்தது. இந்த மாதம் ஓரறை, ஈரறை வீடுகளில் வசிப்போருக்கு $95 கட்டணத் தள்ளுபடி கிடைக்கும்.
மூவறை வீட்டில் வசிப்போருக்கு $85; நாலறை வீட்டுவாசிகளுக்கு $75 கிடைக்கும். ஐந்தறை வீட்டுக்காரர்கள் கட்டணக் கழிவாக $65 பெறுவர். பலதலைமுறை அல்லது எக்ஸிகியூட்டிவ் வீட்டுவாசிகளுக்கு இது $55 ஆக இருக்கும்.
ஒன்றுக்கு மேற்பட்ட சொத்துகளைக் கொண்டுள்ள உறுப்பினர் உள்ள குடும்பங்களுக்கு இந்த உதவி கிடைக்காது.
வீவக குடும்பங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள மொத்த ஜிஎஸ்டி, பயனீட்டுக் கட்டணக் கழிவைக் கணக்கிட்டுப் பார்த்தால் வீவக குடும்பத்தினர் தங்கள் வீட்டின் அளவைப் பொறுத்து $355 முதல் $595 வரை பெற்று இருப்பதாக அமைச்சு தெரிவித்தது.
குறைந்த, நடுத்தர வருமானக் குடும்பங்கள், ஜிஎஸ்டி வரி எனப்படும் விலைபொருள் சேவை வரிச் செலவில் ஒரு பகுதியை ஈடு செய்ய உதவியாக ஜிஎஸ்டி- பயனீட்டுக் கட்டணக் கழிவு ஏற்பாடு, 2012ல் நிரந்தரமான ஓர் ஏற்பாடாக ஆக்கப்பட்டது.
இது ரொக்கமாகவும் மெடிசேவ் எனப்படும் மருத்துவக் கணக்கில் பணம் போடுவது, பயனீட்டுக் கட்டணக் கழிவை வழங்குவது ஆகிய வழியாகவும் மொத்தம் மூன்று வழிகளில் கொடுக்கப்படுகிறது.
அரசு, கடந்த 2020 நிதியாண்டில் ஜிஎஸ்டி வரி-பயனீட்டுக் கட்டணக் கழிவு ஏற்பாடு மூலம் $630 மில்லியன் கொடுத்தது.

