கி. ஜனார்த்தனன்
தன்னைச் சுற்றியிருப்போருக்கு இயற்கைப் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு போதவில்லை என்ற ஆதங்கம் லாவண்யாவுக்கு இருந்தது. அதனாலேயே 20 வயது லாவண்யா பிரகாஷ், ஓயா பிரசாரம் ஒன்றில் ஈடுபடத் தொடங்கினார்.
லாவண்யா தனது உணர்வுகளை முதலில் தன் கேமராவில் எடுத்த படங்கள் வழி காட்டத் தொடங்கினார். நாளடைவில் எழுத்திலும் உரைகளிலும் அவரின் பிரசாரம் தொடர்ந்து அனைத்துலகச் சமூகத்தின் பாராட்டைப் பெற்றன.
தன் 'மை நேச்சர் எக்ஸ்பிரியன்சஸ்' வலைத்தளத்தில் தனது அனுபவங்களைப் பற்றி பதிவிடத் தொடங்கினார்.
அத்துடன் அவர் இயற்கைப் பாதுகாப்பு தொடர்பான உலகச் செய்திகளைப் பற்றி 116 பதிவுகளை வெளியிட்டும் உள்ளார்.
எளிமையாக, உணர்வுபூர்வமாக, எழுத்து நடையில் அமைந்த இவரின் பதிவுகளை, 163 நாடுகளைச் சேர்ந்த 170,000க்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளனர்.
லாப நோக்கற்ற 'டெட் சிங்கப்பூர்' அமைப்பின் ஏற்பாட்டில் குறுகிய, சக்திவாய்ந்த உரைகளை லாவண்யா நிகழ்த்தியும் உள்ளார்.
மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள நகரமாக சிங்கப்பூர் இருந்தாலும் இங்குள்ள தாவர, விலங்கு உயிரினங்களின் பன்முகத்தன்மை தொடர்பான விழிப்புணர்வைத் தான் ஏற்படுத்த விரும்பி உரை நிகழ்த்தியதாக லாவண்யா கூறினார்.
சிறு வயதிலிருந்தே இயற்கை எழிலால் ஈர்க்கப்பட்ட லாவண்யா, புகைப்படங்களை எவ்வாறு எடுப்பதென்று முதலில் கற்றுக்கொண்டார்.
"சிங்கப்பூர் அறிவியல் நிலையத்தின் வகுப்புகள், 'கோடெக்' நிறுவனத்தின் வகுப்புகள் ஆகியவற்றில் சேர்ந்தேன். புகைப்படக் கலையைக் கற்றுக்கொண்டேன்," என்று அவர் கூறினார்.
புக்கிட் தீமா இயற்கைப் பாதுகாப்பு வனப்பகுதி, மத்திய நீர்ப்பிடிப்பு இயற்கைப் பாதுகாப்பு வனப்பகுதி, லாப்ரடோர் இயற்கைப் பாதுகாப்பு வனப்பகுதி மற்றும் சுங்கை புலோ ஈரநிலப் பாதுகாப்பு வனப்பகுதி ஆகியவற்றிலும் சிங்கப்பூரிலுள்ள கிட்டத்தட்ட 50 பூங்காக்களிலும் லாவண்யா 12 வயதுமுதல் படங்கள் பிடித்து அவற்றைப் படத்தொகுப்புகளாக உருவாக்கி வந்தார்.
வலைத்தளத்தில் அவற்றை ஒட்டி லாவண்யா பதிவிட்ட கட்டுரைகள், வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன.
இவ்வாண்டு நவம்பர் மாதத்தின்போது நடைபெற்ற ஐக்கிய நாட்டு மாநாட்டைத் தான் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாகத் தான் கருதுவதாக லாவண்யா பகிர்ந்துகொண்டார்.
"உலகளவில் ஆரோக்கியமான கரியமில வெளியீட்டுத் சந்தையை உருவாக்குவதற்கான பேச்சுவார்த்தையில் சிங்கப்பூர் மும்முரமாகப் பங்கேற்றுள்ளது.
"2050க்குள் நிலக்கரியின் பயன்பாட்டை முற்றிலும் நிறுத்த உள்ளதாகவும் 'மித்தேன்' வெளியீட்டைக் குறைக்கவிருப்பதாகவும் சிங்கப்பூர் உறுதியளித்துள்ளது. சுற்றுச்சூழல் தொடர்பில் சிங்கப்பூர் கொண்டுள்ள கடப்பாட்டை இது காட்டுகிறது," என்றார் லாவண்யா.
ஆயினும், சிங்கப்பூர் தனது எரிசக்தி தேவைகளுக்காக இன்னமும் புதைபடிம எரிபொருள்களை (fossil fuels) பெரிதளவில் நம்பியுள்ளது. சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் மாற்று வழிகளை மேலும் அதிகமாக நாடுவது நல்லது என்றார் இந்த இளையர்.
அத்துடன் கப்பல் துறையிலும் விமானத்துறையிலும் ஏற்படும் தூய்மைக்கேட்டைக் கட்டுப்படுத்த சிங்கப்பூர் கூடுதல் நடவடிக்கை எடுக்கலாம் என இவர் கருதுகிறார்.
இங்கிலாந்தில் பிறந்த லாவண்யா, மூன்று வயதுமுதல் சிங்கப்பூரில் வளர்ந்தவர். சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் தற்போது சுற்றுப்புறம், வர்த்தகம் தொடர்பில் பயின்றுவரும் லாவண்யா, நீடித்த நிலைத்தன்மையுடைய வர்த்தகச் செயல்முறைகளை உருவாக்குவதில் ஆர்வம் கொண்டுள்ளார்.
படங்கள்:
லாவண்யா பிரகாஷ்