700 பள்ளி, கல்லூரி மாணவர்கள் பயனடைவார்கள்; அமைச்சர் பாராட்டு
இர்ஷாத் முஹம்மது
மலாய்/முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த 700 மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக $1 மில்லியன் நிதியை மெண்டாக்கி நிர்வகிக்கும் கல்வி அறநிதிக்கு வழங்கியுள்ளார் 'புரோப்நெக்ஸ்' சொத்து முகவர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான முகமது இஸ்மாயில் கஃபூர்.
தமது 97 வயது தந்தை திரு அப்துல் கஃபூரின் பெயரில் அவர் வழங்கியுள்ள இந்நிதியின் மூலம், 'மெண்டாக்கி-கஃபூர் புரோப்நெக்ஸ்' கல்வி உபகாரச் சம்பளம், 'இடிஎஃப்-கஃபூர் புரோப்நெக்ஸ்' கல்வி உதவி நிதி மற்றும் கணக்குப் பாட உதவி நிதி' எனும் இரு திட்டங்கள் அமைக்கப்படும்.
தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு கணக்குப் பாட உதவி நிதி பயனளிக்கும். தொழில்நுட்பக் கல்விக் கழகங்கள், பலதுறைத் தொழிற்கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவி நிதி பலன் தரும். பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவர்கள் கல்வி உபகாரச் சம்பளத்தைப் பெறும் வாய்ப்பு கிடைக்கும்.
"செய்தித்தாள் விநியோகம், ஒட்டுக்கடை நடத்தியது உட்பட பல வேலைகளைச் செய்து வாழ்வில் சிரமப்பட்டு வந்தவர் என் தந்தை. சமூகத்தின் ஆதரவில் முன்னேற்றம் அடைந்த நான், சமூகத்திற்குத் திருப்பி நன்மை செய்ய கடப்பாடு கொண்டுள்ளேன்.
"என் தந்தையின் பெயரில் இந்தத் திட்டத்தை அமைப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்," என்று கூறினார் திரு இஸ்மாயில் கஃபூர்.
இந்த நிதியை அமைக்கும் பங்காளித்துவ இணக்க நிகழ்ச்சி கடந்த மாதம் 28ஆம் தேதி 'ஒன் ஃபேரர்' ஹோட்டலில் நடந்தது.
அப்போது மெண்டாக்கி அமைப்புக்கும் இஸ்மாயில் கஃபூருக்கும் இடையில் இணக்கக் குறிப்பு கை யெழுத்தானது. அந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்த மெண்டாக்கியின் தலைவரும் தற்காப்பு, மனிதவள மூத்த துணை அமைச்சருமான ஸாக்கி முகம்மது, இஸ்மாயில் கஃபூரின் பெருந்தன்மையைப் பாராட்டி, மேலும் பலர் சமூகத்திற்காக வாய்ப்புகளை ஏற்படுத்த முன்வரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
2021ஆம் ஆண்டு முழுவதும் $2 மில்லியனை சமூகத்திற்கு இஸ்மாயில் கஃபூர் வழங்கியுள்ளார்.
இதைப் போல அனைத்து சமூகத்தினருக்கும் ஆதரவுக் கரம் நீட்ட எண்ணம் கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார். சிங்கப்பூரின் ஆகப்பெரிய சொத்து முகவர் நிறுவனமான புரோப்நெக்ஸில் தற்போது 10,800 முகவர்கள் உள்ளனர்.