சிங்கப்பூரில் செயல்படும் நிறுவனங்கள், தாங்கள் கொடுக்கவேண்டிய பணத்தை குறித்த காலத்தில் கொடுத்துவிடும் போக்கு கொஞ்சம் மேம்பட்டு இருக்கிறது.
நிறுவனங்கள் தொடர்ந்தாற்போல் இரண்டு காலாண்டுகளாக பணத்தை உரிய நேரத்தில் கொடுக்க முடியாமல் தவித்து வந்தன. காலாண்டு அடிப்படையில் இப்போது இதில் எல்லா துறைகளிலுமே கொஞ்சம் முன்னேற்றம் ஏற்பட்டு இருப்பதாக சிங்கப்பூர் வர்த்தக, கடன்பற்று இலாகா நேற்று தெரிவித்தது.
ஆண்டு முடிவு விழாக்காலம் காரணமாக சில்லறை, சேவைத் துறைகளில் பணப்புழக்கம் கொஞ்சம் மேம்பட்டது. இதனால் நிறுவனங்கள் கொடுக்கவேண்டிய பணத்தைத் தாமதமாகக் கொடுப்பது கொஞ்சம் குறைந்தது.
உள்ளூர் நிறுவனங்களின் பணம் செலுத்தும் செயல்திறன் மேம்பட்டு இருக்கிறது என்பதற்கான கண்கூடான அறிகுறிகள் தெரிவதாக 'டன் அண்ட் பிராட்ஸ்திரீட் சிங்கப்பூர்' நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ஆட்ரே சியா தெரிவித்தார்.
நிறுவனங்கள் ஒப்புக்கொண்டபடி கொடுக்கவேண்டிய பணத்தை உரிய நேரத்தில் கொடுக்காமல் தாமதமாக கொடுக்கும் நடைமுறை சென்ற ஆண்டின் 4வது காலாண்டில் 44.3 விழுக்காடாகக் குறைந்து இருக்கிறது. இது 3வது காலாண்டில் 44.9% ஆக இருந்தது.
இதனிடையே, குறித்த நேரத்தில் பணத்தைக் கொடுத்துவிடும் போக்கு 4வது காலாண்டில் 40.8% ஆகக் கூடியது. இது அதற்கு முந்தைய காலாண்டில் 40.5% ஆக இருந்தது.
கொடுக்கவேண்டிய பணத்தில் ஒரு பகுதியை மட்டும் கொடுக்கும் போக்கு 4வது காலாண்டில் 14.9% ஆக இருந்தது. இது 3வது காலாண்டில் 14.6% என்பது குறிப்பிடத்தக்கது. பல துறைகளையும் பார்க்கையில் எல்லா துறைகளிலுமே காலாண்டு அடிப்படையில் தாமத மான பரிவர்த்தனைகள் குறைந்து இருக்கின்றன.
உற்பத்தி, மொத்த விற்பனை துறைகளில் மட்டும் ஆண்டுக்காண்டு அடிப்படையில் தாமத பணப்பட்டுவாடாக்கள் குறைந்து இருக்கின்றன.
உள்ளூர் நிறுவனங்கள் ஒட்டுமொத்த பணப்பட்டுவாடா செயல்திறன் 2020ஐவிட சென்ற ஆண்டில் கொஞ்சம் மேம்பட்டு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

