இந்தோனீசியாவில் உள்ள சதுப்பு நிலக் காடுகளில் புதுவகை சதுப்பு நில மரத்தை சிங்கப்பூரில் இயங்கும் இரண்டு விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்தோனீசியாவைச் சேர்ந்த ஒருவரும் இவர்களுடன் இந்தச் சாதனையில் இடம்பெற்றார்.
இதற்குப் பின்னால் இருக்கும் குழுவில் இடம்பெற்றுள்ள டாக்டர் லாஹிரு விஜெதாசா, இந்தக் கண்டுபிடிப்பு தற்செயலானது என்று தெரிவித்தார். "2015ஆம் ஆண்டு இந்த மரங்களை அடையாளம் கண்டோம். ஆனால், பூக்கள் இல்லாததால் இது புதுவகை சதுப்பு நில மரம்தானா என்பது எங்களுக்குத் தெரியவில்லை," என்று சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகத்தின் சுற்றுப்புற ஆய்வுக் கழகத்தில் உள்ள இவர் கூறினார்.
இந்தக் கண்டுபிடிப்பு, அறிவியல் சஞ்சிகையான 'பிட்டோடாக்சா'வில் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. 'டிசபெலும் ரவாகம்புட்' எனும் இந்த சதுப்பு நில மரத்தை இந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். கிட்டத்தட்ட 60 ஆண்டுகளில் முதன்முறையாக புதுவகை சதுப்பு நில மரம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன் 1963ல்தான் 'ஷொரியா ரெட்டுசா' எனும் புதுவகை சதுப்பு நில மரம் கண்டுபிடிக்கப்பட்டது. அதுவும் இந்தோனீசியாவில் இருந்தது.

