பெற்றோர் பராமரிப்புச் சட்டம் கடந்த பல ஆண்டுகளாக நல்ல பலனைத் தந்துள்ளபோதிலும், வருங்காலத்தில் மூத்தோரிடையிலும் சமூகத்திலும் எழும் தேவை
களைச் சமாளிக்கும் வகையில் வலுவாக்க அச்சட்டத்தை மறுஆய்வு செய்ய பணிக்குழு ஒன்று நிறுவப்பட்டுள்ளது.
தங்களைத் தாங்களே போதுமான அளவுக்குப் பராமரித்துக்கொள்ள இயலாத மூத்தோர் தங்களது பிள்ளைகளிடம் சட்டபூர்வ பராமரிப்பு கோர இச்சட்டம் வழிவகுக்கிறது.
புதிதாக ஏற்படுத்தப்பட்டு உள்ள பணிக்குழு மரின் பரேட் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறப்பினர் சீ கியன் பெங் தலைமையில் இயங்கும். கவனிப்புக் குழு விவாதங்களும் இணையம் வழியான ஆய்வும் இம்மாதத்தில் நடைபெறும் பொதுமக்களையும் பொது அமைப்புகளையும் கலந்து ஆலோசிக்கும் வகையில் இவற்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
புதிய சட்டத்திருத்தத்திற்கான தனி நபர் மசோதாவை இவ்வாண்டு இறுதிக்குள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டு உள்ளதாக பணிக்குழுவின் செயலகம் நேற்று கூறியது.
ஆகக் கடைசியாக, 2010ஆம் ஆண்டில் பெற்றோர் பராமரிப்புச் சட்டம் திருத்தம் செய்யப்பட்டது. அப்போது அதற்கான தனி நபர் மசோதாவை திரு சீ தாக்கல் செய்தார்.
பராமரிப்பு சச்சரவுகளுக்குத் தீர்வுகாண்பதற்கு முன்னர் சமரசப் பேச்சுக்கு முன்னுரிமை வழங்க அப்போது அந்தச் சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.
பராமரிப்பு ஆணை விடுக்குமாறு பெற்றோர் பராமரிப்புக்கான தீர்ப்பாயத்தை பெற்றோர் அணுகுவதற்கு முன்னர் அவர்கள் தங்களது பிள்ளைகளுடன் பெற்றோர் பராமரிப்புக்கான ஆணையர் அலுவலகத்தில் சமரசப் பேச்சு நடத்தவேண்டும் என 2011 மார்ச் மாதம் முதல் கட்டாயமாக்கப்பட்டது. அதற்கு கைமேல் பலன் கிடைத்தது.
அதன் பிறகு பராமரிப்பு ஆணை கோரும் விண்ணப்பங்களின் எண்ணிக்கை சரியத் தொடங்கியது.
2008க்கும் 2010க்கும் இடைப்பட்ட மூன்றாண்டுகளில் சராசரியாக 170 விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில் 2011 முதல் 2013 வரையிலான காலகட்டத்தில் 86 என கிட்டத்தட்ட பாதியாகக் குறைந்தது.

