பாவை சிவக்குமார்
கொவிட்-19 கிருமித்தொற்றுச் சூழலால் ஒரு கட்டத்தில் சிறுவர் முதல் பெரியவர் வரை வீட்டிலேயே முடங்கிக் கிடந்தனர். இளம் பிள்ளைகள் உள்ள உற்ற தோழிகளான உஷா குமரன், ரஸ்மியா பானு இருவருக்கும் அதே நிலை ஏற்பட்டது. ஆனால் அச்சூழலை ஒரு வாய்ப்பாக அவர்கள் பயன்படுத்திக்கொண்டு புத்தாக்க முயற்சி ஒன்றில் இறங்கினர். இருவழித் தொடர்பு அம்சம் கொண்ட குழந்தைகளுக்கான தமிழ் புத்தகங்களை இணைந்து தயாரித்தனர்.
திருமதி ரஸ்மியாவும் திருமதி உஷாவும் கிட்டத்தட்ட 14 ஆண்டு கள் நெருங்கிய நண்பர்கள். ஒரு சமயம், திருமதி ரஸ்மியா தன்னுடைய இரு இளம் பிள்ளைகளுடன் திருமதி உஷா வீட்டுக்குச் சென்றார். இருவருக்கும் இரண்டு வயதில் பிள்ளைகள் இருக்கிறார்கள். குழந்தைகளுக்காக எளிமையான, இருவழித் தொடர்பு அம்சம் பொருந்திய புத்தகங்கள் ஆங்கில மொழியில்தான் அதிகம் இருக்கின்றன என்றும் தமிழில் அதிகம் இல்லை என்றும் இருவரும் வருத்தத்துடன் பகிர்ந்துகொண்டனர்.
இவ்வாறு யதார்த்தமாகத் தொடங்கிய அந்த உரையாடல், அவர்களின் புத்தக உருவாக்கத்திற்கு வித்தாக அமைந்தது.
இருவழித் தொடர்பு அம்சம் கொண்ட புத்தகங்களை, தமிழ் மொழியில் எவ்வாறு தயாரிப்பது என்ற ஆராய்ச்சியில் தாய்மார்கள் இருவரும் ஈடுபடத் தொடங்கினர்.
"வெவ்வேறு வயதுடைய பிள்ளைகளுக்கு ஏற்ற தொட்டுணர் அம்சங்கள், அவர்களை ஈர்க்கும் வண்ணங்கள் போன்றவற்றை ஆராய்ந்தோம். உதாரணத்திற்கு, புதிதாகப் பிறந்த குழந்தையின் கண்ணுக்கு அனைத்து நிறங்களும் தெரியாது. அவர்களுக்கு ஏற்ற வண்ணங்களைக் கண்டறிவதில் நாங்கள் கவனம் செலுத்தினோம்," என்று விளக்கினார் ரஸ்மியா.
புத்தகத்தின் கருப்பொருளைத் தேர்ந்தெடுப்பது, நூலில் இடம்பெறும் ஓவியங்களை வரையக்கூடிய கலைஞரைக் கண்டுபிடிப்பது, புத்தகத்தை அச்சிடும் இடம், புத்தக வெளியீட்டு முறை போன்றவற்றுக்குத் தங்களின் சொந்த நிதியைத் திரட்டினர் தோழிகள்.
"ஒவ்வொரு பக்கத்தையும் நாங்கள் மிக நுணுக்கமாகத் திட்டமிட்டுத் தயாரித்தோம். உதாரணத்திற்கு, 'நிலா நிலா ஓடி வா' என்ற நூலில், ஒரு சிறுமியின் படுக்கை அறை காட்டப்பட்டிருக்கும். அதில் வெறும் பொம்மைகளைக் காட்ட நாங்கள் விரும்பவில்லை. அறிவியல், வானியல் போன்றவற்றில் சிறுமிகள் ஈடுபாடு காட்டலாம் என் பதைக் காட்டும் வகையில் விளையாட்டுப் பொருள்களைச் சித்திரித்துள்ளோம்," என்று குறிப்பிட்டார் உஷா.
தோழிகளின் 'நிலா நிலா ஓடி வா', 'தோசை அம்மா தோசை' நூல்கள் இரண்டும் புதிதாக பிறந்த குழந்தைகள் முதல் சிறுவர்கள் வரை ரசிக்கக்கூடியதாக, தமிழ் கற்பித்தலுக்கு உகந்ததாக அமையும் என்பது இவர்களின் நம்பிக்கை.
இவர்களின் புத்தக உருவாக்கத் திட்டத்தில் சக தமிழர்களை ஈடுபடுத்த வேண்டும் என்பது இவர்களின் இன்னொரு முயற்சி. கொவிட்-19 கிருமித்தொற்றுச் சூழல் காரணத்தால் சீனாவில் தங்களின் புத்தகங்களை அச்சிடும் நிலை ஏற்பட்டது.
இருப்பினும், புத்தகத்தின் படங்களை வரைபவர் இந்தியராக இருக்க வேண்டும் என்பதற்காக அவர்கள் தங்கள் 'இன்ஸ்டகிராம்' மூலம் முயன்று அத்தகைய நிபுணர்களைக் கண்டும் பிடித்தனர்.
இந்த வகையில் உஷா, ரஸ்மியா இருவரும் தங்களின் இரு புத்தகத் தலைப்பிலும் ஆயிரம் பிரதிகளை அச்சிட்டனர்.
2020ஆம் ஆண்டு டிசம்பர் 21ஆம் தேதியன்று தொடங்கிய இவர்களின் நூல் உருவாக்கத் திட்டம், அதே நாள் 2021ல் நிறைவேறியது.
இணையம் வழியாக புத்தகங்களை விற்கும் இவர்கள், அடுத்து சமூகப் பிரச்சினைகளை எவ்வாறு குழந்தைகள் புத்தகத்தில் ஆராயலாம் என்பதை ஆராய்ந்து வருகின்றனர்.
சிறு வயது முதல் தமிழில் வாசிப்பதற்கான வாய்ப்பைப் பிள்ளைகளும் அவர்களின் பெற்றோரும் நழுவவிடக்கூடாது என்பதே இந்த இளம் தாய்மார்களின் விருப்பமாகும்.
நூல்களை வாங்க விரும்புவோர் www.chellameybooks.com என்ற இணையத்தளத்தை நாடலாம்.