புத்தாண்டின் முதல் கதைக்களம், மாணவர்களின் படைப்பாற்றலை ஒட்டி அமைந்தது. கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கதைக் களத்தில் சிங்கப்பூர் சிறுகதைகளை ஆராயும் அங்கம் முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த அங்கத்தை ஆண்டர்சன் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் வழிநடத்தினர். எழுத்தாளர் சித்துராஜ் பொன்ராஜின் 'தர்ம ரதம்' என்ற சிறுகதை, முனைவர் மா. இராஜிக்கண்ணு எழுதிய 'கண்ணே' என்ற சிறுகதை ஆகிய இரண்டையும் மாணவர்கள் தேர்ந்தெடுத்திருந்தனர்.
கதைகளில் கையாளப்பட்ட மொழி, உத்திகள், கதை முடிவு மற்றும் கதை கூறும் கருத்து போன்றவற்றை மாணவர்கள் திறமையாகப் பகுத்தாராய்ந்தனர்.
கலந்துகொண்ட மாணவர்கள் அனைவரும் ஆங்கிலச் சொற்கள் இல்லாமல் தமிழில் உரையாடினார்கள்.
எழுத்தாளர் சந்திப்பு அங்கத்தில் 'படைப்பாக்க அனுபவத்திற்கு எழுத்தே தேவையில்லை' என்ற தலைப்பில் எழுத்தாளர் ஜெயந்தி சங்கர் உரையாற்றினார்.
படைப்பாற்றல் என்பதும் எழுத்து என்பதும் ஒன்றல்ல என்றார். ஒரு படைப்பில் தேய் வழக்கு களைத் தவிர்ப்பதன் முக்கியத்துவம், குறிப்பாக பயன்படுத்திய சொற்களையும் உவமைகளையும் மீண்டும் மீண்டும் பயன்படுத்தாமல் புதிய சொற்களைப் பயன்படுத்துவது வாசகர்களின் ஆர்வத்தைத் தக்கவைத்துக்கொள்ள உதவும் என்று அவர் குறிப்பிட்டார்.
நமக்குள் எழும் எண்ணற்ற கேள்விகளை, சமூக சிந்தனை, சிக்கல்கள் ஆகியவற்றை மனதிற்குள் முதலில் அசைபோட்டு, நிதானமாக எழுதப்படும் படைப்பு கள் சிறப்பு என்றார்.
உரையாடலின்போது, தமிழுடன் தமது இருபது ஆண்டுகாலப் பயணம்தான் ஆங்கிலத்திலும் தற்போது சிறப்பான படைப்புகளை எழுதுவதற்குத் தமக்குத் துணைபுரிவதாகக் கூறினார்.
இந்தியாவில் செயல்படும் 'டெல்லி வையர்' இணையத்தளம் நடத்திய ஆய்வில் 2021ல் வெளியான ஆங்கில நூல்களிலிருந்து ஐம்பது சிறந்த எழுத்தாளர்களின் பெயர்ப் பட்டியலில் எழுத்தாளர் ஜெயந்தி சங்கரும் இடம்பெற்றிருப்பது சிங்கப்பூருக்கும் எழுத்தாளர் கழகத்திற்கும் பெருமை சேர்ப்பதாகும் என்று சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத் தலைவர் திரு நா.ஆண்டியப்பன் குறிப்பிட்டார்.
திருவாட்டி ஜெயந்தியின் 'தபுலா ரோஸா' (Tabula Rosa) என்ற ஆங்கில நூலைச் சிறந்த நூல்களில் ஒன்றாக அந்த இணையத்தளம் தேர்வு செய்தது.
சிறந்த படைப்புகளை எழுதுவதற்குத் தொடர் வாசிப்பு மிக முக்கியம் என்றும் பரிசுகளுக்கு என்றில்லாமல் பயிற்சிகளுக்காகத் தொடர்ந்து எழுதுபவர்களின் படைப்புகள் பண்படும் என்றும் திரு ஆண்டியப்பன் கூறினார்.
முத்தமிழ் விழா பற்றிய அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்தார். போட்டிகளில் குறிப்பாக மாணவர்கள் பங்கேற்க முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.