இவ்வாண்டுக்கான மூத்த வழக்கறிஞர்களாக நேற்று அறிவிக்கப்பட்ட மூவரில் இருவர் பெண்கள். தலைமை நீதிபதி சுந்தரேஷ் மேனன் சட்ட ஆண்டு தொடக்க நிகழ்வில் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
திரு டான் புவே பூன், திருவாட்டி மரினா சின் லி யுவென் மற்றும் திருவாட்டி கோ சுவீ யென் ஆகியோரே அந்த மூவர்.
தலைசிறந்த திறன்கள், சட்டம் பற்றி விரிவான அறிவாற்றல், உயர்தர நிபுணத்துவம் போன்றவற்றைப் பெற்றிருக்கும் வழக்கறிஞர்களைச் சிறப்பிக்க சீனியர் கவுன்சல் (எஸ்சி) எனப்படும் மூத்த வழக்கறிஞர் கௌரவம் வழங்கப்படுகிறது.
இந்த நியமனம் பெற்ற மூவரும் தங்களது பெயருக்குப் பின்னால் 'எஸ்சி' என்பதை இணைத்துக்கொள்ளலாம்.
மூத்த வழக்கறிஞர்கள் என்னும் சிறப்பைப் பெற்ற இரு பெண்களும் நேற்று செய்தியாளர்களிடம் பேசினர். இளைய பெண் வழக்கறிஞர்
களுக்கு முன்னோடியாக தங்களால் விளங்கமுடியும் என்று அவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.
டான் கோக் குவான் பார்ட்னர்ஷிப் சட்ட நிறுவனத்தின் இணை நிர்வாக பங்குதாரரான திருவாட்டி சின், 56, சட்டத் தொழிலில் நீடித்து நிலைத்திருப்பது ஒரு பிரச்சினை என்றார். பல்வேறு காரணங்களால் பல வழக்கறிஞர்கள் தங்களது சட்டத் தொழிலில் இருந்து விலகிச் செல்வதாக அவர் கூறினார்.
"பெண்களால் சிறந்து விளங்க முடியும் என்பதில் நம்பிக்கை கொண்ட நான், பெண் வழக்கறிஞர்கள் தங்களது தொழிலைக் கைவிடும்போது பெரிதும் வருந்து வேன்.
"சொந்தக் காரணங்களுக்காக அவர்கள் விலகினால் சொல்வதற்கு ஒன்றுமில்லை. அவ்வாறின்றி சில சூழ்நிலைகள் காரணமாக இருந்தால் அது ஒரு துரதிர்ஷ்டமான நிலை.
"மனைவியாக, அம்மாவாக, சகோதரியாக, மகளாக மட்டுமே இருக்க பெண்கள் படைக்கப்பட்டார்களா என்பது என் கேள்வி.
"எனக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பு, பெண்களால் சாதிக்க இன்னும் நிறைய உள்ளது என்
பதற்கான அடையாளம்," என்றார் திருவாட்டி சின்.
மற்றொருவரான திருவாட்டி கோ, 40, வோங் பார்ட்னர்ஷிப் நிறுவனத்தின் பங்குதாரர்.
சட்டத் தொழிலில் இருந்து விலகுதல் விகிதம் கவலை அளிப்பதாகத் தெரிவித்த அவர், தமக்கு அளிக்கப்பட்ட புதிய நியமனம் தம்மை ஊக்குவிப்பதாகச் சொன்னார்.

