'டிரெளட்' எனும் ஒருவகை மீன்களை வளர்க்க அதிநவீன பண்ணை ஒன்று அடுத்த ஆண்டு முதல் கிராஞ்சிக்கு அருகே உள்ள நியோ டியூ பகுதியில் இயங்கவுள்ளது. இதில் ஆண்டுதோறும் சுமார் 1,200 டன் 'ரெயின்போ டிரௌட்' வகை மீன்களை வளர்க்கமுடியும்.
இதன் மூலம் உள்ளூரில் வளர்க்கப்படும் மீன்களின் எண்ணிக்கைளை அதிகரிக்கமுடியும் என்று புளூ அக்குவா இன்டர்னேஷனல் நிறுவனம் தெரிவித்தது. இந்தப் பண்ணைக்குத் தேவையான தொழில்நுட்பத் தீர்வுகளை அந்நிறுவனம் வழங்குகிறது.
1,200 டன் என்பது ஆண்டுதோறும் சிங்கப்பூரில் வளர்க்கப்படும் மீன்களில் கால் பங்கு. 2016ஆம் ஆண்டுக்கும் 2019ஆம் ஆண்டுக்கும் இடையே ஆண்டுதோறும் 4,578லிருந்து 4,851 டன் வரை எடைகொண்ட மீன்கள் வளர்க்கப்பட்டன. 2020ஆம் ஆண்டு இது 3,960 டன்னாகக் குறைந்தது. கொவிட்-19 கிருமிப் பரவல் சூழலால் மீன் விற்பனை குறைந்தது இதற்குக் காரணம்.
சிங்கப்பூர், 2030ஆம் ஆண்டுக்குள் தனக்குத் தேவையான ஊட்டச்சத்தில் 30 விழுக்காட்டை உள்ளூரிலேயே தயாரிக்கும் இலக்கைக் கொண்டுள்ளது. அதற்கு இத்திட்டம் உதவும் என்று புளூ அக்குவா சொன்னது.
சுவையில் சால்மன் வகை மீனைப்போல் குளிர்நீரில் வசிக்கும் டிரெளட் மீன் இருக்கும் என்று கூறப்படுகிறது. சால்மன் மீன்கள் சிங்கப்பூரில் பிரபலமானவை.
டிரெளட் மீனின் செதில்கள் ஆரஞ்சு கலந்த சிவப்பு நிறத்தில் கவர்ச்சியாக இருக்கும் என்று புளூ அக்குவா குழுமத்தின் தலைவரும் நிர்வாக அதிகாரியுமான டாக்டர் ஃபார்ஷாத் ஷிஷெச்சியன் கூறினார். சால்மனின் செதில்களின் நிறமோ சற்று மங்கி இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்தத் தொழில்நுட்பப் பண்ணையை உருவாக்க சுமார் 20 மில்லியன் வெள்ளியாகும் என்று டாக்டர் ஃபார்ஷாத் தெரிவித்தார். சிங்கப்பூர் உணவு அமைப்பு, என்டர்பிரைஸ் சிங்கப்பூர் அமைப்பு ஆகியவை வழங்கும் மானியங்களை புளூ அக்குவா பயன்படுத்திக்கொள்ள விரும்புகிறது என்று அவர் கூறினார்.