பிடோக் வட்டாரத்தில் அமைந்து உள்ள ரெட் ஸ்வாஸ்திகா
பள்ளிக்கு வெளியே நேற்று காலை பாதுகாவலர் ஒருவர் மீது காரை ஏற்றி விடப்போவதாக ஓட்டுநர் ஒருவர் மிரட்டினார். இந்தச் சம்பவத்தைக் காட்டும் காணொளி சமூக ஊடகங்களில் வலம் வந்தது.
இந்நிலையில், மிரட்டல் விடுத்ததாக நம்பப்படும் 61 வயது ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தொடக்கப்பள்ளியின் நுழை
வாயிலுக்கு வெளியே காணப்பட்ட வெள்ளை நிற 'பென்ட்லி' சொகுசு காரை வழிமறித்தபடி பாதுகாவலர் நின்றுகொண்டிருந்ததைக் காணொளி காட்டியது.
அப்பள்ளி வளாகத்திற்குள் நுழைய அதன் ஓட்டுநர் முற்படுவது தெரிந்தது. அந்த காருக்கு முன்னால் வழிமறித்து நின்ற பாதுகாவலரைப் பொருட்படுத்தாது, அங்குலம் அங்குலமாக அந்த காரை முன்னால் நகர்த்தினார் அந்த ஓட்டுநர்.
இந்நிலையில், இந்தக் காணொளி குறித்து தமக்குத் தெரியும் என்று கல்வி அமைச்சர் சான் சுன் சிங் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார்.
பாதுகாவலர் ஒருவருக்கும் பள்ளி ஊழியர் ஒருவருக்கும் ஆபத்தை விளைவிக்கும் விதமாக ஓட்டுநர் ஒருவர் தமது காரை இயக்குவதை அந்தக் காணொளி காட்டியதாக அமைச்சர் சான் கூறினார்.
இதை ஏற்றுக்கொள்ள முடியாத நடத்தை என்று அவர் வர்ணித்தார்.
"பெரியவர்களாக நாம் மற்றவர்களை எப்படி மரியாதையுடன் நடத்துகிறோம் என்பதில் நம்முடைய பிள்ளைகளுக்குச் சிறந்த உதாரணமாகத் திகழ வேண்டும். நமது பள்ளிச் சமூகத்தின் ஒட்டுமொத்த பாதுகாப்பிற்காக நடப்பில் உள்ள விதிகளுக்கு உட்பட்டு நாம் நடந்து கொள்ள வேண்டும்," என்று திரு சான் வலியுறுத்தினார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் பாதுகாவல் ஊழியர் சங்கம், காவல்துறையிடம் புகார் அளித்தது.
சம்பந்தப்பட்ட பாதுகாவலரான 62 வயது திரு நியோ ஆ வாட் நலமாக இருப்பதாகவும் வீட்டில் குணமடைந்து வருவதாகவும் சங்கம் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் நேற்று பிற்பகல் பதிவிட்டது.
திரு நியோ ஏறத்தாழ மூன்று ஆண்டுகளாக அப்பள்ளியில் பணிபுரிந்து வருவதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் சங்கத்தின் தலைமைச் செயலாளரான 39 வயது ரேமண்ட் சின் தெரிவித்தார்.
"தமது வலது முழங்காலில் வலி ஏற்பட்டுள்ளதாக திரு நியோ எங்களிடம் தெரிவித்தார். மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு அவருக்கு மூன்று நாட்கள் மருத்துவ விடுப்பு வழங்கப்பட்டுள்ளது," என்று திரு சின் தெரிவித்தார்.
காலை 7.30 மணி அளவில் சம்பவம் நிகழ்ந்ததாக திரு சின் கூறினார். அப்போது தங்கள் பிள்ளைகளைப் பெற்றோர் பள்ளிக்கு அனுப்பிக்கொண்டிருந்தனர். சர்ச்சையில் சிக்கியுள்ள காரில் பள்ளிக்குள் செல்ல தேவையான ஒட்டு வில்லை இருந்தும் அது வரிசையில் காத்திருக்காமல் முந்திச் செல்ல முயன்றதால் நிறுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
திரு நியோவின் வீட்டுக்கு சங்கத்தினர் நேற்று பிற்பகல் சென்று அவரை நலம் விசாரித்தனர். திரு நியோவுக்கு $200 ரொக்கமும் உடல் ஊட்டத்துக்குத் தேவையான பொருட்களும் வழங்கப்பட்டன.
இதற்கிடையே, கார் ஓட்டுநரின் செயலைக் கண்டித்தும் திரு நியோவின் கடமையுணர்வைப் பாராட்டியும் அரசியல்வாதிகள் சிலர் தங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளனர்.
"பணியில் ஈடுபடும் நமது பாதுகாவலர்களுக்கு எதிராக நடத்தப்படும் இத்தகைய மூர்க்கத்தனமான செயல்களைச் சகித்துக்கொள்ள முடியாது," என்று தேசிய தொழிற்சங்க காங்கிரஸின் (என்டியுசி) தலைமைச் செயலாளர் இங் சீ மெங் சாடினார்.
"பள்ளியின் பாதுகாப்புக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படக்கூடாது என்ற நோக்கில் திரு நியோ காரை வழிமறித்து நின்றார். இது அவரது தொழில் பக்தியைக் காட்டுகிறது," என்று உள்துறை துணை
அமைச்சர் டெஸ்மண்ட் டான் பாராட்டினார்.