நாட்டின் தலைசிறந்த விளையாட்டு வீரர்களுக்கு கணிசமான நிதிஉதவி வழங்கப்படும் அதே வேளையில், அரசாங்கத்தின் ஆதரவு பணத்தை மட்டும் சார்ந்ததாக இருக்காது. அதையும் தாண்டி அவர்கள் வாழ்க்கையின் பல அம்சங்களுக்கும் அது விரிவடைகிறது என்று நேற்று நாடாளுமன்றத்தில் கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சர் எட்வின் டோங் கூறினார்.
சிங்கப்பூரில் விளையாட்டு வீரர்கள் மற்றும் விளையாட்டு கலாசாரத்தை ஆதரிப்பதற்காக அரசாங்கம் செயல்படுத்தியுள்ள பல்வேறு திட்டங்களை திரு டோங் கோடிட்டுக் காட்டினார்.
"நிதியின் குறிப்பிடத்தக்க பகுதி நேரடியாக விளையாட்டு வீரர்களுக்குச் செல்கிறது. உதாரணத்துக்கு 'ஸ்பெக்ஸ்' உபகாரச் சம்பளம். இது பெரிய விளையாட்டுகளில் போட்டியிட மிகவும் நம்பிக்கைக்குரிய விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படுகிறது," என்றார் அமைச்சர்.
இந்த உபகாரச் சம்பளம் விளையாட்டு வீரர்களின் தினசரி செலவுகளுக்கு மாதாந்திர உதவித்தொகையை வழங்குகிறது. அவர்களின் பயிற்சி செலவுகளை ஈடுகட்ட நிதியுதவியும், உள்ளூர், வெளிநாட்டு பயிற்சி மற்றும் போட்டிகளில் பங்கேற்க உபகரணங்கள் வாங்கவும் உதவுவதுடன் கூடுதல் விளையாட்டு மருத்துவம், விளையாட்டு அறிவியல் கல்வி கற்கும் ஆதரவையும் பெற்றுத் தருகிறது.
இதற்கு வழங்கப்படும் அந்தத் தொகைக்கு ஒரு வரம்பு உள்ளது. சிறந்த விளையாட்டு வீரர்கள் மாதத்திற்கு பல ஆயிரம் வெள்ளிகளைப் பெறுகிறார்கள் என்று திரு டோங் கூறினார்.
2013ல் தொடங்கப்பட்ட 'ஸ்பெக்ஸ்' உபகாரச் சம்பளத்தை இதுவரை 168 இயல்பான உடல்திறன் வீரர்களும் உடற்குறையுள்ள வீரர்களும் பெற்றிருக்கிறார்கள்.
பல்வேறு விளையாட்டுகளில் இருந்து தற்போது உதவித்தொகை பெற்றவர்கள் 76 பேர் உள்ளனர்.
"அவர்களில் பலர் பெரிய விளையாட்டுப் போட்டிகளிலும் உலக வெற்றியாளர் போட்டிகளிலும் பதக்கங்களை வென்றுள்ளனர். பேட்மிண்டன் உலக வெற்றியாளர் லோ கியன் இயூ, ஐந்து முறை பாராலிம்பிக் நீச்சலில் தங்கப் பதக்கம் வென்ற யிப் பின் சியூ போன்ற சிலர் சிங்கப்பூரர்களுக்கு நன்கு அறிமுகமானவர்களாகத் திகழ்கின்றனர்," என்று அமைச்சர் குறிப்பிட்டுச் சொன்னார்.