சிங்கப்பூருக்குப் பறந்துவந்த அரிய வகை கழுகைப் பறக்கவைக்க மேற்கொள்ளப்பட்ட மூன்றாவது முயற்சி வெற்றி கண்டது.
கழுகு கடந்த திங்கட்கிழமை பிற்பகல் சிறகடித்து விண்ணைத் தொட்டது.
இருப்பினும், கழுகு தொடர்ந்து உன்னிப்பாகக் கண்காணிக்கப்படும் என்று மண்டாய் வனவிலங்கு அமைப்பைச் சேர்ந்த நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 30ஆம் தேதியன்று ஃபேரர் சாலையில் அந்தக் கழுகு பலவீனமான நிலையில் கண்டெடுக்கப்பட்டது. அதை தேசிய பூங்காக் கழக அதிகாரிகள் காப்பாற்றினர்.
அதையடுத்து, அந்தக் கழுகுக்கு ஜூரோங் பறவைப் பூங்காவில் சிகிச்சை அளிக்கப்பட்டு, அதனைப் பலப்படுத்த தேவையான இரை கொடுக்கப்பட்டது.
இதற்கு முன்பு அந்தக் கழுகைப் பறக்கவைக்க மேற்கொள்ளப்பட்ட இரண்டு முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன.
இம்மாதம் 4ஆம் தேதியன்று முதல் முயற்சி மேற்கொள்ளப்
பட்டது.
ஆனால் மேகமூட்டமாக இருந்ததால் கழுகு பறக்கவில்லை. இவ்வகை பறவைகள் பறக்க ஒருவித வெப்பக் காற்று தேவை என்று
நிபுணர்கள் தெரிவித்தனர்.
ஏறத்தாழ அரைமணி நேரத்துக்கு நிபுணர்கள் கழுகுக்கு உற்சாகமூட்டியும் இருந்த இடத்தை விட்டு அது நகரவில்லை.
மறுநாள் அக்கழுகைப் பறக்கவைக்க அதிகாரிகள் மீண்டும் முயன்றனர். இம்முறை அது 50 மீட்டர் தூரம் பறந்து அருகில் இருந்த திடலில் தரையிறங்கியது.

