மனைவியைக் கொன்றதாக 33 வயது சாவ் குவோக் ஹன் டேவிட் பிராயன் மீது நேற்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அங் மோ கியோ ஸ்திரீட் 23ல் உள்ள வீட்டில் தமது மனைவியான 30 வயது இசபெல் எலிசபெத் ஃபிரான்சிஸை அவர் கொன்றதாக நம்பப்படுகிறது. கொலைக் குற்றம் நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனையுடன் பிரம்படிகளும் விதிக்கப்படலாம்.
பெண் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டதாக நேற்று முன்தினம் காலை 7.35 மணி அளவில் தகவல் கிடைத்ததாக காவல்துறை தெரிவித்தது. சம்பவ இடத்துக்கு விரைந்த அதிகாரிகள் பெண் ஒருவர் அந்த வீட்டில் சுயநினைவின்றி கிடந்ததைக் கண்டனர்.
அவர் சம்பவ இடத்திலேயே மாண்டுவிட்டதாக அறிவிக்கப்பட்டது. காயமடைந்த சாவ் மருத்துவ
மனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். நேற்று முன்தினம் காலை 7 மணி அளவில் அலறல் சத்தம் கேட்டு தூக்கத்திலிருந்து எழுந்ததாக மாண்ட பெண்ணின் அண்டை வீட்டுக்காரரான திருவாட்டி
விவியன் கூறினார்.
தமது மகளைப் பாலர் பள்ளிக்கு அனுப்ப கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் கழித்து கீழே இறங்கிய
போதுதான் குடியிருப்புக் கட்டடத்துக்குக் கீழே காவல்துறையினர் இருப்பதைக் கண்டதாக அவர் கூறினார். மனைவியைக் கொலை செய்ததாகச் சந்தேகிக்கப்படும் ஆடவர் கைது செய்யப்பட்ட
விவரம் பிறகுதான் தமக்குத் தெரியவந்ததாக திருவாட்டி விவியன் தெரிவித்தார்.
சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகத்தில் பகுதிநேர மாணவராக இருக்கும் ஒருவர், கடந்த ஆண்டு ஜனவரி மாதம் திருவாட்டி ஃபிரான்சிஸைச் சந்தித்ததாகத் தெரிவித்தார். அவர் தமது பெயரைத் தெரிவிக்க மறுத்து விட்டார்.
திருவாட்டி ஃபிரான்ஸிசும் தாமும் ஒன்றாக 'ஜுரிஸ் டாக்டர்' சட்டத்துறை பட்டக் கல்வியில் பயின்றதாக அவர் தெரிவித்தார்.
"அவர் மகிழ்ச்சியாக இருந்தார் என நினைத்தேன். கடந்த ஆண்டு அவர் தமது வீட்டைப் புதுப்பித்து குடிபுகுந்தார்.
"இரண்டு வாரங்களுக்கு முன்பு கருவுற்றிருப்பதாக அவர் என்னிடம் கூறினார். குழந்தை இவ்வாண்டு நடுப்பகுதியில் பிறக்கும் என்று அவர் தெரிவித்தார். அதைக் கேட்டு நான் மகிழ்ச்சி அடைந்தேன்.
"அவர் பேச்சாற்றல் மிக்கவர். எப்போதும் சுறுசுறுப்புடன் இருப்பார். கல்வியில் சிறந்து விளங்கினார்," என்று அந்த நண்பர் கூறினார். கடந்த ஆண்டு சந்தைப்படுத்தல் வேலையில் திருவாட்டி விவியன் சேர்ந்ததாக அவர் தெரிவித்தார்.
கொலை நடந்ததாகக் கூறப்படும் வீட்டுக்கு ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தியாளர்கள் நேற்று சென்றபோது வீட்டுக்கு வெளியே தரையில் ரத்தக் கறைகளையும் ரத்தக் கறைகள் படிந்த பாதச்
சுவடுகளையும் அவர்கள் கண்டனர்.

