பேத்தியைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய 65 வயது முதிய
வருக்கு 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை, 18 பிரம்படிகள், $9,400 அபராதம் விதிக்கப்பட்டன. முதியவருக்கு 50 வயதுக்கு மேலாகிவிட்டதால் அவருக்குப் பிரம்படி கொடுக்க முடியாது. எனவே, அதற்குப் பதிலாக அவருக்குக் கூடுதலாக ஒன்பது மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட 6 வயது சிறுமி யின் அடையாளத்தைக் காக்க முதியவரின் பெயரை வெளி
யிடக்கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2015ஆம் ஆண்டுக்கும் 2017ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் தமது பேத்தியை அந்த முதியவர் தொடர்ந்து பலமுறை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
2015ஆம் ஆண்டில் அச்சிறுமி யிடம் அந்த முதியவர் தகாத முறையில் நடந்துகொண்டபோது உறவுக்காரர் ஒருவர் அவரைக் கையும் களவுமாகப் பிடித்தார். பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயாரிடம் நடந்ததைப் பற்றி அவர் தெரிவித்தார்.
ஆனால் இந்தப் பாலியல் துன்புறுத்தல் விவகாரம் ஏறத்தாழ இரண்டு ஆண்டுகள் கழித்துத்தான் வெளிச்சத்துக்கு வந்தது.
சிறுநீர் கழிக்கும்போது வலி ஏற்படுகிறது என்று சிறுமி முறையிட்டதை அடுத்து அவரது தாயார் அவரை கேகே மகளிர், சிறார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். சிறுமி பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டது 2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 24ஆம் தேதியன்று தெரியவந்தது.
அந்த முதியவர் மறுநாள் கைது செய்யப்பட்டார். தீர்ப்பை எதிர்த்து முதியவர் மேல்முறையீடு செய்யப்போவதாக அறியப்படுகிறது.