டாக்சி, தனியார் வாடகை கார் ஓட்டுநர்கள் கொவிட்-19க்கு எதிராக வரும் பிப்ரவரி 1ஆம் தேதிக்குள் முற்றிலும் தடுப்பூசி போட்டுக்கொண்டு இருக்கவேண்டும். இதற்கான காலக்கெடு நீட்டிக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இருந்தாலும், வாகன ஓட்டுநர்கள் தாங்கள் முற்றிலும் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் வரை தங்கள் வேலை உடன்பாடுகளைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க ஏதுவாக நிலப் போக்குவரத்து ஆணையத்துடன் சேர்ந்து செயல்பட்டு டாக்சி நிறுவனங்கள் ஏற்பாடுகளைச் செய்துகொண்டுள்ளன.
போக்குவரத்து மூத்த துணை அமைச்சர் ஏமி கோர் ஃபேஸ்புக்கில் நேற்று இந்த விவரங்களைத் தெரிவித்தார்.
முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொள்ள பிப்ரவரி 1ஆம் தேதிக்குப் பிறகும் காலஅவகாசம் தேவைப்படக்கூடிய வாகன ஓட்டுநர்களின் நிதிச் சுமை குறைய இந்த ஏற்பாடு உதவும் என்று டாக்டர் கோர் குறிப்பிட்டார்.
தங்களுடைய உடன்பாடுகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்கும் வாகன ஓட்டுநர்கள், அப்படி நிறுத்தி வைக்கும் காலத்திற்கான வாடகையைச் செலுத்த வேண்டியதில்லை,
சிங்கப்பூரில் முழுநேரமாகப் பணியாற்றும் ஏறத்தாழ 66,500 டாக்சி மற்றும் தனியார் கார் ஓட்டுநர்களில் 99 விழுக்காட்டுக்கும் மேற்பட்டவர்கள் கொவிட்-19க்கு எதிரான தடுப்பூசியை முழுமையாகப் போட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.
அவர்களில் முக்கால்வாசிக்கும் மேற்பட்டவர்கள் கூடுதல் தடுப்பூசியைப் (பூஸ்டர்) போட்டுக்கொண்டு உள்ளனர். இன்னமும் ஏறக்குறைய 300 ஓட்டுநர்கள்தான் குறைந்தபட்சம் ஓர் ஊசியைக்கூட போட்டுக்கொள்ளாமல் இருக்கிறார்கள்.
முழுமையாக தடுப்பூசியை போட்டுக்கொண்டவர்கள் மட்டுமே பிப்ரவரி 1ஆம் தேதிக்குப் பிறகு வேலையிடத்துக்குத் திரும்ப முடியும் என்று அரசாங்கம் டிசம்பரில் அறிவித்தது.
இந்தக் காலக்கெடுவை பிப்ரவரிக்குப் பிறகு நீட்டிக்கும்படி டாக்சி, வாடகைக் கார் ஓட்டுநர் சங்கங்கள் கோரிக்கை விடுத்தன.

