கொவிட்-19க்கு எதிரான தடுப்பூசிகளை மாற்றிப் போடுவதால் ஏற்படக்கூடிய விளைவுகள் பற்றி சிங்கப்பூரில் உள்ள ஆய்வாளர்கள் ஆராய்ந்து வருகிறார்கள்.
தேசிய தடுப்பூசித் திட்டத்தில் இடம்பெறாத ஊசி மருந்து களை ஈடுபடுத்தியும் இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.
தடுப்பூசியை மாற்றிப் போடுவதால் நோய் தடுப்பாற்றலில் எந்த அளவுக்கு விளைவு ஏற்படும் என்பதைக் கண்டுபிடிப்பது அவர்களின் இலக்கு.
கூடுதல் தடுப்பூசி (பூஸ்டர்) உட்பட ஒரே தடுப்பூசியை மூன்று முறை போடுவதால் ஏற்படக்கூடிய விளைவுகளும் ஒரே தடுப்பூசியை இரு முறை போட்டு கூடுதல் தடுப்பூசியாக வேறு ஒரு நிறுவனத்தின் தடுப்பூசி மருந்தைச் செலுத்துவதால் ஏற்படக்கூடிய விளைவுகளும் எப்படி இருக்கும் என்பதை ஆய்வாளர்கள் ஒப்பிட்டுப் பார்ப்பார்கள்.
ஆய்வு பற்றிய விவரங்கள் அமெரிக்காவின் தேசிய மருந்து நூலகத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.
உலகின் ஆகப் பெரிய அந்த நூலகத்தில் மருந்தக ஆய்வுகள் பற்றிய விவரங்கள் நிறைந்து இருக்கின்றன.
ஏ*ஸ்டார், டியுக்-என்யுஎஸ், கேகே மாதர் சிறார் மருத்துவமனை ஆகியவற்றுடன் சேர்ந்து டான் டோக் செங் மருத்துவமனை சிங்கப்பூர் ஆய்வாளர்கள் நடத்தும் இந்த ஆய்வுக்கு நிதி ஆதரவு வழங்குகிறது.
ஆய்வுக்குத் தொற்றுநோய்களுக்கான தேசிய நிலையத்தைச் சேர்ந்த டாக்டர் பார்னாபே யோங் தலைமை வகிக்கிறார். அதில் 21 வயது மற்றும் அதற்கும் அதிக வயதுள்ள ஏறத்தாழ 600 பேர் ஈடுபடுத்தப்படுவர்.

