தொழில்நுட்பக் கோளாறால் தடைபட்ட 'விடிஎல்' பேருந்துப் பயணச்சீட்டு விற்பனை
தடுப்பூசி போட்டோருக்கான பயணப் பாதைத் திட்டத்தின்கீழ் (விடிஎல்) சிங்கப்பூர் - ஜோகூர் பாரு இடையிலான பேருந்துப் பயணச்சீட்டுகளை வாங்க பலரும் முண்டியடித்து வருகின்றனர்.
இந்நிலையில், வாடிக்கையாளர்கள் சிலர் தங்களது பயணச்சீட்டுகளை ரத்து செய்ததாலும் தொழில்நுட்பக் கோளாறாலும் பயணச்சீட்டு விற்பனை நேற்று முன்தினம் தடைபட்டது.
'விடிஎல்' திட்டத்தன்கீழ் பிப்ரவரி 10 முதல் 28ஆம் தேதி வரைக்குமான பயணச்சீட்டுகள் விற்பனையை சிங்கப்பூரின் 'டிரான்ஸ்டார் டிராவல்' நிறுவனம் 'ஷாப்பி' மெய்நிகர்க் கடை வழியாகவும் நேற்று முன்தினம் தொடங்கியது.
இதற்குமுன் ஒரு நேரத்தில் ஒரு நாளுக்கான பயணச்சீட்டுகளை அந்நிறுவனம் விற்றுவந்தது. இந்நிலையில், இம்முறை 19 நாள்களுக்குமான பயணச்சீட்டுகளை ஒரே நாளில் அது வெளியிட்டது.
மக்கள் சிறந்த முறையில் தங்களது பயண, விடுப்பு ஏற்பாடுகளைத் திட்டமிட ஏதுவாக இப்படி 19 நாள்களுக்கான பயணச்சீட்டுகள் விற்பனை தொடங்கப்பட்டது என்று நிலப் போக்குவரத்து ஆணையப் பேச்சாளர் விளக்கமளித்தார்.
ஆனால், நேற்று விற்பனை தொடங்கியதும் சிலர் தங்களது பயணச்சீட்டுகளை ரத்து செய்ததால், பயணச்சீட்டு வாங்க ஆர்வம் காட்டிய மற்ற வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து வாடிக்கையாளர் சேவை மற்றும் சமூக ஊடகங்கள் வழியாகத் தனக்குத் தகவல் கிடைத்ததாக 'டிரான்ஸ்டார் டிராவல்' நிறுவனம் கூறியது.
வாடிக்கையாளர்களின் விவரங்களைப் பெற ஷாப்பி மின்வணிகத்தளம் பயன்படுத்திய இணையவழிப் படிவமே தடங்கலுக்குக் காரணம் எனக் கண்டறியப்பட்டது.
அதிகமானோர் அதனைப் பூர்த்திசெய்து, தாக்கல் செய்ததால் அப்படிவம் அப்படியே நிலைகுத்தி நின்றுவிட்டதாகக் கூறப்பட்டது. இதனால் வாடிக்கையாளர்கள் தங்களது விவரங்களைச் சமர்ப்பிக்க முடியாமல் போனது.
இதன் காரணமாக, பயணிகளைப் பற்றிய விவரங்கள் இல்லாத முன்பதிவுகள் 30 நிமிடங்களுக்குப் பின்னர் தானாகவே ரத்து செய்யப்பட்டுவிட்டன.
அதன்பின் அப்படிவம் படிப்படியாக மீண்டும் செயல்பாட்டிற்கு வந்த பிறகும், வாடிக்கையாளர்கள் சிலர் தங்களது முன்பதிவுகளை ரத்து செய்ததாக 'டிரான்ஸ்டார் டிராவல்' நிறுவனம் தெரிவித்தது.
இதனையடுத்து, நம்பகமான தீர்வு கண்டுபிடிக்கப்படும்வரை ஷாப்பி இணையத்தளம் மூலம் பயணச்சீட்டு விற்கப்படுவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்தத் தடங்கலுக்காக மன்னிப்பு கேட்டுக்கொண்ட 'டிரான்ஸ்டார் டிராவல்' நிறுவனம், பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்குப் பணம் திருப்பித் தரப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
சிங்கப்பூர்-மலேசியா இடையிலான தரைவழி 'விடிஎல்' திட்டத்தின்கீழ் 'காஸ்வே லிங்க்', 'டிரான்ஸ்டார் டிராவல்' நிறுவனங்கள் மட்டுமே பேருந்து சேவைகளை இயக்கி வருகின்றன.
பிப்ரவரி 27 அன்று ஜோகூரில் இருந்து சிங்கப்பூர் திரும்புவதற்காக ஷாப்பி இணையத்தளம் வழியாக வாங்கிய பயணச்சீட்டு ரத்து செய்யப்பட்டுவிட்டதால், தாமும் தம் கணவரும் ஜோகூரில் உள்ள தங்களின் ஒரு வயது மகனை நேரில் சென்று பார்க்கும் திட்டம் இப்போது நிறைவேறாமல் போய்விடலாம் என்று கவலை தெரிவித்தார் நிர்வாகியாகப் பணிபுரியும் திருவாட்டி ஓங் யியின், 29.
இதன் தொடர்பில் வாடிக்கையாளர் சேவையைப் பெற பலமுறை தொடர்புகொண்டும் தமக்குப் பதில் வரவில்லை என்று திருவாட்டி யியின் சொன்னார்.
"பணத்தைத் திருப்பித் தருவதற்காகப் பதிலாகப் பயணச்சீட்டைக் கொடுங்கள்," என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
சீனப் புத்தாண்டை ஒட்டி, 'விடிஎல்' பேருந்துப் பயணச்சீட்டுகளைப் பெற பெரும் போட்டி நிலவுகிறது. பிப்ரவரி 2வது வாரத்திற்கான ஏறத்தாழ 7,500 நுழைவுச்சீட்டுகள் அரைமணி நேரத்தில் விற்றுத்தீர்ந்தன.

