கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் இருந்து, குறைந்தது 1,200 மோசடி சம்பவங்கள் இடம்பெற்றன. 'இ-வோலட்' எனப்படும் மின்பணப்பை விண்ணப்ப மோசடி போன்றதொரு மோசடி மீண்டும் தலையெடுத்துள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
வாட்ஸ்அப், வைபர், ஐஎம்ஓ போன்ற குறுஞ்செய்திச் செயலிகள் மூலம் அழைத்து, எதிர்முனையில் இருப்போரிடம் இருந்து பெற்ற தகவல்களைப் பயன்படுத்தி மோசடிப் பேர்வழிகள் மின்பணப்பைகளுக்கு விண்ணப்பம் செய்வர்.
சிங்கப்பூர் காவல்துறை அல்லது மனிதவள அமைச்சு போன்ற அரசாங்க அமைப்புகளில் இருந்து அழைப்பதாக மோசடிக்காரர்கள் கூறுவர்.
பெரும்பாலும் அவ்வமைப்புகளின் அடையாள முத்திரை அல்லது அவ்வமைப்புகளைச் சேர்ந்த அதிகாரிகளின் படங்களை முகப்புப் படங்களை வைத்திருப்பர். சிலர் காவல்துறை அதிகாரி போன்ற சீருடையை அணிந்து, காணொளி வழியாகவும் தொடர்புகொள்வர்.
விசாரணைகளுக்கு உதவும் நோக்கில் சரிபார்ப்புக் காரணங்களுக்காக எதிர்முனையில் இருப்போரிடம் இருந்து தனிப்பட்ட தகவல்கள், வங்கிக் கணக்கு விவரங்கள், ஒற்றைப் பயன்பாட்டு மறைச்சொல் போன்றவற்றை அவர்கள் கேட்பர்.
அதுபோன்ற அழைப்புகளைப் புறக்கணியுங்கள் என்றும் மோசடிக்காரர்களிடம் தனிப்பட்ட தகவல்களையும் வங்கிக் கணக்கு விவரங்களைத் தர வேண்டாம் என்றும் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
மோசடி வங்கிப் பரிவர்த்தனைகள் எதுவும் இடம்பெற்றால் அதுபற்றி 1800-255-0000 எனும் நேரடி அழைப்பு எண்ணில் காவல்துறையைத் தொடர்புகொள்ளும்படி அவர்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.
'ஐவிட்னஸ்' இணையத்தளம் வழியாகவும் அவர்கள் தகவல் தெரிவிக்கலாம்.
காவல்துறை உதவி தேவைப்படுவோர் 999 என்ற எண்ணில் அழைக்கலாம்.
மோசடிகள் தொடர்பில் கூடுதல் தகவல்களைப் பெற 'ஸ்கேம் அலெர்ட்' இணையத்தளத்தை நாடலாம் அல்லது 1800-722-6688 என்ற மோசடித் தடுப்பு எண்ணில் அழைக்கலாம்.