சிங்கப்பூர் பொருளியல் படிப்படியாக மீண்டுவரும் சூழலில், கடந்த ஆண்டு பலதுறைத் தொழிற்கல்லூரிகளில் இருந்து பட்டம் பெற்றோருக்கு நல்ல வேலைகளும் ஊதியமும் கிடைத்தன.
இங்குள்ள ஐந்து பலதுறைத் தொழிற்கல்லூரிகளின் அண்மைய 'பட்டதாரி வேலைவாய்ப்பு ஆய்வு' மூலம் இது தெரியவந்துள்ளது.
அப்பலதுறைத் தொழிற்கல்லூரிகளில் கடந்த ஆண்டு பட்டம் பெற்றோரில் 92.2 விழுக்காட்டினர் ஆறு மாதங்களுக்குள் நிரந்தர, தன்னுரிமை அல்லது பகுதிநேர வேலை தேடிக்கொண்டனர். முந்திய 2020ஆம் ஆண்டில் இவ்விகிதம் 87.4 விழுக்காடாக இருந்தது.
கடந்த 2020ஆம் ஆண்டில் நிரந்தர வேலை கிடைத்தோருக்கு இடைநிலை மாத ஊதியமாக $2,400 வழங்கப்பட்டது. அது 2021ஆம் ஆண்டில் 2,500 வெள்ளியாக உயர்ந்தது.
முந்திய ஆண்டுகளைப் போலவே, சுகாதார அறிவியல், தகவல், மின்னிலக்கத் தொழில்நுட்பப் பாடங்களில் பட்டம் பெற்றோருக்கு மற்ற துறையினரைக் காட்டிலும் மேம்பட்ட ஊதியம் கிட்டியது.
பலதுறைத் தொழிற்கல்லூரிகளில் 2021ல் பட்டயம் பெற்ற 11,928 பேரில் 9,025 பேர் இந்தக் கருத்தாய்வில் பங்கெடுத்தனர். அத்துடன், 2018ல் பட்டயம் பெற்று, அதன்பின் ஈராண்டுகள் முழு நேர தேசிய சேவையில் ஈடுபட்ட 5,191 பேரும் இதில் பங்கேற்றனர்.
மேம்பட்ட இடைநிலை ஊதியத்துடன் புதிய பட்டதாரிகளுக்கு வேலை கிடைத்திருப்பது, நிறுவனங்கள் பலதுறைத் தொழிற்கல்லூரிப் பட்டதாரிகளின் திறன்கள்மீதும் அறிவாற்றல்மீதும் கொண்டுள்ள நம்பிக்கையைக் காட்டுகிறது என்றார் தெமாசெக் பலதுறைத் தொழிற்கல்லூரியின் முதல்வர் பீட்டர் லாம்.
புதிய பலதுறைத் தொழிற்கல்லூரிப் பட்டதாரிகளில் 58 விழுக்காட்டினருக்கு முழுநேர வேலை கிடைத்தது.
2020ஆம் ஆண்டில் இவ்விகிதம் 52 விழுக்காடாக இருந்தது.
கடந்த ஆண்டு மார்ச் முதல் டான் டோக் செங் மருத்துவமனையில் உணவு, பான ஒருங்கிணைப்பாளராகவும் ஊட்டச்சத்துத் தொழில்நுட்பராகவும் பணியாற்றத் தொடங்கினார் தெமாசெக் பலதுறைத் தொழிற்கல்லூரியில் செயல்முறை உணவியல் மற்றும் ஊட்டச்சத்துப் பாடப்பிரிவில் பட்டயம்பெற்ற குமாரி சுவாதி சேகர், 21 (படம்).
அவரது வேலை தேடும் படலம் ஓரிரு மாதங்கள் நீடித்தன. அத்துறையில் உள்ள பொருத்தமான வேலைவாய்ப்புகள் குறித்த விவரங்களை அனுப்பி விரிவுரையாளர்கள் இருவர் இவருக்கு உதவினர்.
"நமது உடல் மட்டுமின்றி, மனநலத்திற்கும் உணவிற்கும் என்ன தொடர்பு என்பதைப் பற்றி படிப்பது புதிதாகவும் என்னை ஈர்ப்பதாகவும் இருந்தது. 'கீட்டோ டயட்' போன்ற பலவிதமான உணவுமுறைகள் குறித்தும் அவற்றின் நன்மை தீமைகள் குறித்தும் கற்றறிந்தேன்," என்றார் குமாரி சுவாதி.
தற்போது நோயாளிகளுக்கு உணவுமுறைகள் குறித்து ஆலோசனை வழங்கி வரும் இவர், வெளிநாட்டில் மேற்கல்வி பயிலவும் விண்ணப்பித்துள்ளார்.