வீடமைப்பு வளர்ச்சிக் கழக அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றின் மேல்தளத்தில், பாதுகாப்புக் கவசம் அணியாமல் தொழில்நுட்பர் ஒருவர் குளிரூட்டிக்கான காற்று அழுத்தியைப் பழுதுபார்க்கும் பணியில் ஈடுபட்டதை அறிந்து சமூக ஊடகவாசிகள் கவலை தெரிவித்துள்ளார்.
'சிங்கப்பூர் ஹோம் டிஐஒய்' ஃபேஸ்புக் பக்கத்தில் இம்மாதம் 11ஆம் தேதி இச்சம்பவம் தொடர்பான படங்கள் வெளியாகின.
அடுக்குமாடிக் குடியிருப்பின் 11 அல்லது 12ஆம் தளத்தில் உள்ள ஒரு வீட்டின் வெளிப்புறத்தில், தாங்குபலகை மீதுள்ள காற்று அழுத்தியின்மீது அந்த ஊழியர் அமர்ந்திருந்ததை அப்படங்கள் காட்டின.
ஏதேனும் அசம்பாவிதம் நேர்ந்தால் அந்த ஊழியரின் உயிருக்கே அச்சுறுத்தலாக அமைந்துவிடலாம் என்று ஃபேஸ்புக்வாசி ஒருவர் கவலை தெரிவித்திருந்தார்.
தங்களது வீடுகளில் குளிரூட்டி பழுதுபார்க்கும் பணிக்காக ஒப்பந்ததாரர்களை ஈடுபடுத்தியபோதும் இதுபோன்று ஊழியர்கள் பாதுகாப்புக் கவசம் அணியாமல் வேலைசெய்ததாகப் பலரும் குறிப்பிட்டு இருந்தனர்.
இச்சம்பவம் குறித்து மனிதவள அமைச்சை அணுகியபோது, அது கருத்துரைக்க மறுத்துவிட்டதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி கூறியது.
அதே நேரத்தில், பணியின்போது உயரத்தில் இருந்து கீழே விழுந்ததினால் ஏற்பட்ட உயிருடற்சேதம் குறித்த புள்ளிவிவரங்களை அமைச்சு வழங்கியது.
கடந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில், உயரத்தில் இருந்து விழுந்த 35 சம்பவங்கள் நிகழ்ந்தன. 2020ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் இதுபோன்ற 32 சம்பவங்கள் நிகழ்ந்தன.
கடந்த ஞாயிறன்று சைனாடவுன் பாயின்ட் நீர்க்கசிவுத் தடுப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்த 28 வயது பங்ளாதேஷ் ஊழியர் ஒருவர், 4ஆம் தளத்திலிருந்து 2ஆம் தளத்தில் விழுந்துவிட்டார்.

