கல்வி அமைச்சு நடத்தும் 50 பாலர் பள்ளிகளில் 2023ஆம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைப் பதிவு இடம்பெறும் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அடுத்த ஆண்டு புதிதாகத் திறக்கப்படவுள்ள ஏழு புதிய பாலர் பள்ளிகளும் அவற்றில் அடங்கும்.
வரும் பிப்ரவரி மாதம் 4ஆம் தேதி காலை 9 மணியில் இருந்து 8ஆம் தேதி மாலை 4 மணி வரை மாணவர் சேர்க்கைப் பதிவு இடம்பெறும்.
2018 ஜனவரி 2ஆம் தேதி முதல் 2019 ஜனவரி 1ஆம் தேதிக்குள் பிறந்த குழந்தைகள் சேர்க்கைப் பதிவிற்குத் தகுதிபெறுவர். அவர்கள் சிங்கப்பூரர்கள் அல்லது நிரந்தரவாசிகளாக இருக்க வேண்டும்.
கல்வி அமைச்சின் பாலர் பள்ளி இணையத்தளம் வழியாக இந்நடவடிக்கை நடத்தப்படும். முடிவுகள் மார்ச் 31ஆம் தேதி வெளியிடப்படும்.
கொவிட்-19 பரவல் காரணமாக அந்த பாலர் பள்ளிகளில் பொது வரவேற்பு நிகழ்ச்சிகள் இடம்பெறாது என்றும் அதற்குப் பதிலாக கல்வி அமைச்சின் பாலர் பள்ளி இணையத்தளத்தில் மெய்நிகர் பொது வரவேற்பு நிகழ்ச்சி நடத்தப்படும் என்றும் அமைச்சு வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.
இம்மாதம் 29ஆம் தேதி காலை 9.30 மணி முதல் நண்பகல் 12.30 மணிவரை மெய்நிகர் பொது வரவேற்பு நிகழ்ச்சி நடத்தப்படும்.
தனது பாலர் பள்ளிகள் அனைத்திலும் தமிழ், சீனம், மலாய் ஆகிய மூன்று தாய்மொழிப் பாடங்களும் வழங்கப்படும் என்று அமைச்சு தெரிவித்தது.
மாணவர் சேர்க்கைப் பதிவு குறித்த கூடுதல் தகவல்களுக்கு https://www.moe.gov.sg/preschool/moe-kindergarten எனும் இணையப்பக்கத்தை நாடலாம்.