கே.சி.விஜயன்
லிட்டில் இந்தியா பகுதியில் உள்ள ஒரு பேரங்காடி மீது 'ஆல் இந்தியா சூப்பர்மார்க்கெட் பிரைவேட் லிமிடெட்' எனப் பெயர்கொண்ட பேரங்காடி தொடுத்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து பதிப்புரிமைச் சட்டத்தை மீறிவிட்டதாக தொடுக்கப்பட்டிருந்த வழக்கை நீதிமன்றம் நிராகரித்ததுடன் 'இந்தியன் சூப்பர்மார்க்கெட் பிரைவேட் லிமிடெட்' எனப் பெயர் கொண்டுள்ள அந்தப் போட்டி பேரங்காடி அதன் முத்திரையைத் தொடர்ந்து பயன்படுத்தவும் அனுமதி அளித்துள்ளது.
இதனுடன் 'இந்தியன் சூப்பர்மார்க்கெட் பிரைவேட் லிமிடெட்' என்ற பெயரில் இருக்கும் பதிவை நிராகரிக்கவும் அதன் பெயர்ப்பலகையில் வர்த்தக வடிவில் காணப்படும் '23' என்ற எண்ணிக்கையை நீக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சியையும் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. மேலும், வர்த்தகத்தில் போட்டி பேரங்காடியான 'இந்தியன் சூப்பர்மார்க்கெட்', 'ஆல் இந்தியா சூப்பர்மார்க்கெட்' வெற்றிகரமாகச் செயல்படுவதைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி அதைப் போலவே தனது வர்த்தக முத்திரையை வடிவமைத்து மேன்மை அடைய முயற்சிப்பதாக 'ஆல் இந்தியா சூப்பர்மார்க்கெட்' கூறிய புகாரையும் உயர் நீதிமன்ற நீதிபதி வேலரி தியன் நிராகரித்தார்.
"ஆல் இந்தியா சூப்பர்மார்க்கெட் பிரைவேட் லிமிடெட்டின் பதிப்புரிமையைச் சட்டவிரோதமாக இந்தியன் சூப்பர்மார்க்கெட் மீறியதாகக் கூறப்படுவதையும் அதன் வர்த்தக வடிவத்தைப் பயன்படுத்தி அது ஆல் இந்தியா சூப்பர்மார்க்கெட் போல் செயல்படுவதாகவும் கூறப்படுவது நிரூபிக்கப்படவில்லை," என்று தனது தீர்ப்பில் நீதிபதி வேலரி தியன் கூறியுள்ளார்.
அருகருகே செயல்படுகின்றன
இந்த இரண்டு பேரங்காடிகளும் 300 மீட்டர் இடைவெளியில் லிட்டில் இந்தியா பகுதியில் செயல்படுகின்றன.
அத்துடன் இவை இரண்டுமே இந்தியக் கலாசாரம், இந்திய சமையல் பொருள்களை விற்பனை செய்வதுடன் இந்திய வாடிக்கையாளர்களைக் குறிவைத்து தங்கள் வர்த்தகத்தை நடத்துவது இங்கு நினைவுகூரத்தக்கது. 'ஆல் இந்தியா சூப்பர்மார்க்கெட்' நோரிஸ் ரோட்டில் உள்ள நான்கு மாடிக் கட்டடத்தில் செயல்படுகிறது.
இங்கு பல்வேறு மளிகைப் பொருள்கள், காய்கறி வகைகள், பழங்கள், தனிப்பட்ட முறையில் ஒருவர் பயன்படுத்தும் பொருள்கள் மற்றும் வீட்டிற்குத் தேவையான பொருள்களை விற்கிறது.
அதன் ஆண்டு வருமானம், 2015ஆம் ஆண்டு நவம்பர் மாதத்துக்கும் 2020ஆம் ஆண்டு ஜூன் மாதத்துக்கும் இடைப்பட்ட காலத்தில் $54.8 மில்லியன் ஆகும். அதன் ஒருநாள் வருமானம் சராசரியாக $30,000 எனவும் மாதம் வருமானம் $1 மில்லியன் எனவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
'இந்தியன் சூப்பர்மார்க்கெட்' பேரங்காடி 2020ஆம் ஆண்டு ஜூலை மாதம் அப்பர் வெல்ட் ரோட்டில் செயல்படத் தொடங்கியது.
கோரிக்கையை அடுத்து புகார்
இதைக் கண்டு அதிருப்திஅடைந்த 'ஆல் இந்தியா சூப்பர்மார்க்கெட் பிரைவேட் லிமிடெட்' தனது வழக்கறிஞர்கள் மூலம் 'இந்தியன் சூப்பர்மார்க்கெட்' என்ற வர்த்தகப் பெயர், வர்த்தக முத்திரை போன்வற்றைப் பயன்படுத்துவதை நிறுத்துமாறு கோரியது.
இதற்கு 'இந்தியன் சூப்பர்மார்க்கெட் பிரைவேட் லிமிடெட்' மறுக்கவே, 'ஆல் இந்தியா சூப்பர்மார்க்கெட் பிரைவேட் லிமிடெட்டும்' அதன் இயக்குநர் பாஸ்கரன் என்பவரும் 'இந்தியன் சூப்பர்மார்க்கெட்' மீது வழக்குத் தொடுத்தனர். 'இந்தியன் சூப்பர்மார்க்கெட்டின்' நிறுவனம் தங்களது பதிப்புரிமையை மீறியதுடன் தங்களது வர்த்தகப் பெயரைப் பயன்படுத்திப் பயனடைந்ததாகவும் 'ஆல் இந்தியா சூப்பர்மார்க்கெட்' குற்றம் சுமத்தியது.
வழக்கை விசாரித்த நீதிபதி வேலரி தியன், அனைத்து சூழ்நிலைகளையும் பார்க்கும்போது 'இந்தியன் சூப்பர்மார்க்கெட்' என்ற பெயரைப் பயன்படுத்தியதால் 'இந்தியன் சூப்பர்மார்க்கெட்' நிறுவனம் தங்கள் நிறுவனத்தைத் தவறாகப் சித்திரித்துப் பயன்பெறவில்லை என்று தீர்ப்பளித்தார்.
வாடிக்கையாளர்களுக்குக் குழப்பம்
'இந்தியன் சூப்பர்மார்க்கெட்' நிறுவனமும் தங்களைப் போலவே காய்கறிகள், பழங்கள் விற்பனையில் ஈடுபடுவதாலும் அங்குள்ள காட்சிப்படுத்தும் அடுக்குகள் ஒரே நிறத்தில், ஒரே பெயர் கொண்டதாக இருந்ததாலும் வாடிக்கையாளர்கள் குழப்பமடைந்து அதனால் மோசடி, தவறான சித்திரிப்பு நிகழ்ந்துள்ளதாக 'ஆல் இந்தியா சூப்பர்மார்க்கெட்' கூறியது.
'ஒற்றுமைகளைவிட வேறுபாடுகள் நிறைய உள்ளன'
இந்த வாதத்தை நிராகரித்த நீதிபதி வேலரி தியன், இரண்டு நிறுவனங்களின் பதிவு முத்திரையும் ஒன்றாக இருப்பதாகக் கூறுவதை 'ஆல் இந்தியா சூப்பர்மார்க்கெட்' நிறுவனம் நிரூபிக்கவில்லை என்று தமது தீர்ப்பில் கூறினார்.
அத்துடன், 'இந்தியன் சூப்பர்மார்க்கெட்' நிறுவனத்தின் வர்த்தகப் பதிவு முத்திரை பொதுமக்களின் குறிப்பிட்ட பிரிவினரிடையே தங்களது வர்த்தகமும் 'ஆல் இந்தியா சூப்பர்மார்க்கெட்' நிறுவனத்தின் வர்த்தகமும் ஒன்றுதான் எனத் திரித்துக் கூறப்பட்டுள்ளதாகவும் அதனால் குழப்பம் ஏற்படக்கூடும் என்பதை 'ஆல் இந்தியா சூப்பர்மார்க்கெட்' நிரூபிக்கத் தவறிவிட்டதாகவும் நீதிபதி தமது தீர்ப்பில் கூறியுள்ளார். மேலும், இரு நிறுவனங்களின் பதிப்பு முத்திரையும் ஒன்றாக உள்ளது என்பதையும் 'ஆல் இந்தியா சூப்பர்மார்க்கெட்' நிறுவனம் நிரூபிக்கத் தவறிவிட்டதை நீதிபதி சுட்டினார்.
"ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, ஆல் இந்தியா சூப்பர்மார்க்கெட் நிறுவனத்தின் பதிவு முத்திரையும் இந்தியன் சூப்பர்மார்க்கெட்டின் பதிவு முத்திரையும் ஒன்றாகக் காட்சியளிப்பதற்குப் பதிலாக அவற்றுக்கு இடையே நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. அத்துடன், ஆல் இந்தியா சூப்பர்மார்க்கெட்டின் பதிவு முத்திரை குறிப்பிட்டுக் கூறும் அளவுக்கு தனித்துவம் வாய்ந்து விளங்குகிறது," என்று நீதிபதி வேலரி தியன் குறிப்பிட்டார்.
மேலும் தமது தீர்ப்பில் நீதிபதி, "இந்தியன் சூப்பர்மார்க்கெட் நிறுவனம் தனது பொருள்கள் ஆல் இந்தியா சூப்பர்மார்க்கெட்டில் இருந்து வேறுபட்டது எனக் காண்பிக்க எடுத்துக்கொண்ட முயற்சிகளையும் நான் கருத்தில் கொள்கிறேன். இரண்டு நிறுவனங்களின் வர்த்தகப் பெயர்ப்பலகை, கடை முகப்பு ஆகியவையும் மாறுபட்டிருப்பது நன்றாகத் தெரிகிறது," என்று விளக்கினார். இந்தக் காரணங்களால் தாம் இந்த வழக்கை தள்ளுபடி செய்வதாகக் கூறிய நீதிபதி 'ஆல் இந்தியா சூப்பர்மார்க்கெட்', 'இந்தியன் சூப்பர்மார்க்கெட்' நிறுவனத்துக்கு வழங்க வேண்டிய செலவுத் தொகை குறித்த விசாரணை பின்னாளில் நடத்தப்படும் என்றும் தமது தீர்ப்பில் தெரிவித்தார்.

