தரைவீடுகள் வாங்கத் தகுதிபெறாதவர்கள் என்று அறிந்திருந்தும் மூன்று சீன நாட்டவருக்காகத் தமது பெயரில் தரைவீடுகள் வாங்கிய சிங்கப்பூரருக்கு இரண்டு வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சொங் ஃபான்ரோங் (படம்) என்ற அந்த 49 வயது மாது, குடியிருப்புச் சொத்துச் சட்டத்தின் கீழ் குற்றம் புரிந்ததை முன்னதாக ஒப்புக்கொண்டார்.
குடியிருப்புச் சொத்துச் சட்டத்தின் கீழ், வெளிநாட்டினருக்காகச் சிங்கப்பூரர்கள் தங்கள் பெயரில் வீடு வாங்க முடியாது.
சொங்குக்குத் தண்டனை விதிக்கும்போது, மேலும் இரண்டு குற்றச்சாட்டுகள் கருத்தில் கொள்ளப்பட்டன.
'பெல்கிரேவியா வில்லாஸ்' தரைவீடுகளை 2014ஆம் ஆண்டில் வாங்குவதற்கு மூன்று சீன நாட்டவருக்கு சொங் துணைபோனார்.
வீடுகள் சொங்கின் பெயரில் வாங்கப்பட்டிருந்தாலும் அவற்றை வாங்குவதற்கான பணம் திரு வாங் சென், திரு லியூ குவோஹுய், சென் சியாவ்பு ஆகிய அந்த மூன்று சீன ஆடவர்களிடமிருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
அரசாங்க ஒப்புதலுடன் வெளிநாட்டவர் சொத்து வாங்குவதற்குச் சட்டப்படி முடியும்.
திரு வாங் சம்பந்தப்பட்ட வழக்கில் அவர் சிங்கப்பூருக்குக் குடியேற விரும்புவதை அறிந்த சொங், தரைவீடு வாங்க அவருக்கு ஆலோசனை வழங்கியிருந்தார்.
தனது பெயரில் முதலில் வீடு வாங்கி, பின்னர் வாங் சிங்கப்பூர்க் குடியுரிமை பெற்ற பிறகு பத்திரங்களை மாற்றிக்கொள்ளலாம் என சொங் சொன்னதாக நீதிமன்றத்தில் கூறப்பட்டது.
முன்னாள் பாலர் பள்ளி உரிமையாளரும் சிங்கப்பூர்க் குடியுரிமை பெற்றவருமான சொங், நொடித்துப்போனவர் என்று அறிவிக்கப்பட்டவர்.
சட்டத்தை மீறுவோருக்கு 10,000 வெள்ளி வரை அபராதம் அல்லது மூவாண்டு சிறைத் தண்டனை அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.

