கொவிட் சூழலும் மலேசியாவிலும் தமிழகத்திலும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் கொட்டித் தீர்த்த மழையும் இந்தப் பொங்கலை 'விலை கூடிய பொங்கலாக்கி' உள்ளன. மழை விளைச்சலைக் கெடுத்தது. விநியோகத்தை கொவிட் பாதித்துள்ளது. எந்தச் சூழலிலும் பண்பாட்டைப் பேணும் சிங்கப்பூர் தமிழ் மக்கள், பொங்கல் திருநாளை இன்று சிறப்பாகக் கொண்டாடி மகிழ்கின்றனர்.
சக்தி மேகனா, பாவை சிவக்குமார்
புதுப் பானையில் புத்தரிசி போட்டு பால் பொங்கி, பொங்கல் வைத்து தை முதல் நாளைக் கொண்டாடுவது தமிழர் வழமை. பால் பொங்குவது போல மகிழ்ச்சியும் வளமும் பொங்கும் என்பது தமிழ் மக்களின் நம்பிக்கை.
வழி வழியாகத் தொடரும் பாரம்பரியம் கொவிட் சூழலில் விடுபட்டு விடக்கூடாது என்று புதுப் பானையும் கரும்பும் இஞ்சி மஞ்சளும் வாங்க நேற்று பலரும் லிட்டில் இந்தியாவுக்கு விரைந்தனர்.
"கொவிட்-19 கிருமித்தொற்றின் தாக்கம் தொடர்ந்து பல தடைகளை ஏற்படுத்தி வந்தாலும், நம் பாரம்பரியத்தை விட்டுக்கொடுக்கக் கூடாது," என்றார் பொங்கலுக்குப் பொருள் வாங்க நேற்று லிட்டில் இந்தியா வந்திருந்த திருமதி லட்சுமி.
எந்தச் சூழலிலும் பண்பாட்டையும், பாரம்பரியத்தையும் மறவாமல், தொடர்ந்து முடிந்தவரைப் பொங்கலைக் கொண்டாட விரும்புவதாக திருமதி லட்சுமியைப் போலவே இன்னும் பலரும் கூறினார்.
லிட்டில் இந்தியாவின் பொங்கல் கொண்டாட்டத்தில் குதூகலிப்பதற்காகவே நேற்று லிட்டில் இந்தியா வந்திருந்திருந்தார் ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரியில் பயிலும் 18 வயது கே. ஹரிணி.
"பள்ளிக்குச் செல்வதால் வீட்டில் பெரிதாகக் கொண்டாட முடியாது. பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்து பொங்கல் சாப்பிடுவேன்," என்றார் ஹரிணி.
கொட்டித் தீர்த்த மழையால்
கரும்பு, பூவுக்கு கிராக்கி
கரும்பு, இஞ்சி மஞ்சள் கொத்து, மண் பானைகள், வாழையிலை போன்ற பொருள்கள் தமிழ்நாட்டிலிருந்தும் மலேசியாவிலிருந்தும் இறக்குமதி செய்யப்படுகின்றன.
அண்மையில் மலேசியாவிலும் தமிழகத்திலும் விடாது பெய்த அடைமழை இந்த ஆண்டு விளைச்சலைப் பெரிதும் பாதித்து விட்டதால் பொருள்கள் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதனால் விலையும் கூடிள்ளது. இதில் முக்கியமாக பூவும் கரும்பும் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது என்றார் ஜோதி ஸ்டோர் புஷ்பக் கடையின் திரு ராஜ்குமார்.
கடந்த ஆண்டு ஒரு கரும்பு $4.00 முதல் $5.00 வரை விற்கப்பட்டது. இந்த ஆண்டு $5.00லிருந்து $7.00 வரை உயர்ந்திருந்தது. அதேபோல் ஒரு பந்து மல்லிகைச் சரம் வழக்கமான $8.00லிருந்து $12.00க்கும் மேல் அதிகரித்திருந்தது.
அதிகரித்துள்ள இறக்குமதிச் செலவு
சில பெரிய கடைகள் இந்தியாவிலிருந்து அதிக அளவில் கரும்பை இறக்குமதி செய்துள்ளன. திரு ராஜ்குமார், தாமும் இந்தியாவிலிருந்து கரும்பை கொண்டுவந்துள்ளதாகச் சொன்னார்.
விநியோகப் பிரச்சினையால் இறக்குமதி செலவும் கூடிவிட்டதாகக் கூறிய திரு ராஜ்குமார், சென்ற ஆண்டு ஒரு கொள் கலன் கரும்புக்கு $1,200 கொடுத்ததாக வும் இந்த ஆண்டு அது $6,000 ஆகிவிட் டதாகவும் சொன்னார். ஒரு கொள்கலனில் கிட்டத்தட்ட 4,000 கரும்புகள் இருக்கும்.
அதேபோல் $12.00 ஆக இருந்த ஒரு கிலோ மல்லிகைப் பூ $40.00 ஆக உயர்ந்து விட்டது என்றார் அவர். மேலும் இந்தியாவிலேயே தேவை அதிகம் இருப்பதால், குறைந்த அளவே ஏற்றுமதி செய்கிறார்கள் என்பதையும் திரு ராஜ்குமார் குறிப்பிட்டார். மலேசியாவிலிருந்து கரும்பும் பூவும் வந்திருந்தால் விலை ஏற்றம் இருந்திருக்காது என்றார் அவர்.
இந்த ஆண்டு மலேசியாவிலிருந்து குறைந்தளவே கரும்பு வந்துள்ளது. பூவும் குறைவாகவே வந்துள்ளதாகவும் ஓம்சிவசக்தி பூக்கடையின் நிறுவனரான திரு.மு.வேலுமணி குறிப்பிட்டார்.
பல கடைகளில் நேற்று மாலையில் பெரும்பாலும் கரும்பு விற்றுவிட்டன.
பல கடைகளிலும் பூ விலை அதிகமாக இருந்தது. அதிக விலை கொடுத்தாலும் தேவையான பூ கிடைத்ததில் பலருக்கும் மகிழ்ச்சி. நேற்று மாலையில் பெரும்பாலும் பூவும் தீர்ந்துவிட்டது.
கடந்த ஆண்டைவிட விற்பனை அதிகம்
கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு விற்பனை அதிகமாக இருப்பதாக லிட்டில் இந்தியாவில் பல கடைக்காரர்களும் கூறினர். இருப்பினும், பொங்கல் பொருள்கள் வாங்க முன்புபோல இப்போது எல்லாருமே லிட்டில் இந்தியாவுக்கு வருவதில்லை என்று வருத்தப்பட்டனர் சில கடைக்காரர்கள்.
"இப்போது நாட்டின் பல பகுதிகளிலும் இந்தியக் கடைகள் இருக்கின்றன. இஞ்சி, மஞ்சள், கரும்பு, தேங்காய் போன்ற பொங்கலுக்குத் தேவையான பொருள்கள் வீட்டின் அருகிலேயே கிடைப்பதால், அதிகமானோர் இங்கு வருவதில்லை," என்றார் கேம்பல் லேனில் கரும்புக் கடை வைத்திருந்த திரு சுரேந்தர்.
கொவிட்-19 கிருமித்தொற்றுச் சூழலின் தாக்கத்திலிருந்து பாதுகாப்பாக இருக்க, பலர் லிட்டில் இந்தியாவில் கூடுவதைத் தவிர்க்க விரும்புகின்றனர். மேலும், பொங்கல் வாரநாளில் வந்ததாலும் விற்பனை சற்று குறைந்துள்ளதாக அவர் கூறினார்.
மற்ற நாள்களில் அக்கம்பக்கக் கடைகளில் வாங்கினாலும் பொங்கல், தீபாவளி போன்ற விழாக்காலங்களில் லிட்டில் இந்தியா செல்வதையே பெரும்பாலானவர்கள் விரும்புகிறார்கள் என்றார் ஹவ்காங் பகுதியில் கடை நடத்தும் பெயர் குறிப்பிட விரும்பாத சில்லறை வியாபாரி.
பண்டிகை என்றால் தேக்காதான்
"தேக்கா போனால் பண்டிகை வந்தது போல இருக்கிறது. அங்கே பல கடைகள் இருக்கும். அதோடு இப்படி ஏதாவது பண்டிகை, பெருநாள், நல்லநாள் என்றால்தானே தேக்கா போக முடிகிறது," என்றார் திருமதி லட்சுமி, 64.
அம்மாவுடன் லிட்டில் இந்தியாவில் பொங்கலுக்குத் தேவையான சாமான்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டிருந்த முன்னாள் தாதியான 55 வயது திருமதி கமலா ஸ்ரீநிவாசன், கொவிட் கடந்த இரண்டு ஆண்டுகளாக பொங்கல் கொண்டாட்ட உணர்வைக் கொன்றுவிட்டது என்று வருத்தப்பட்டார்.
"முன்புபோல பொங்கலைச் சிறப்பாகக் கொண்டாட முடியவில்லை. கொண்டாட்ட உணர்வே இல்லை. எப்படி இருந்தாலும் பொங்கல் வைக்க வேண்டும் என்பதால் பொருள்கள் வாங்க வந்தேன். அம்மாவுடன் வெளியில் செல்லும்போது பயத்துடனேயே செல்ல வேண்டியுள்ளது," என்றார் அவர்.
"கொவிட்டுக்காக கொண்டாட்டத்தை விட முடியுமா, விலை கூடிவிட்டதால் பொங்கல் வைக்காமல் இருக்க முடியுமா," என்றார் திருமதி லட்சுமி.