பிள்ளைகளின் கற்றல் பயணத்திலும் அவர்களிடையே நற்பண்புகளை விதைப்பதிலும் பெற்றோர் முக்கியப் பங்கு வகிப்பதாகக் கல்விக்கான இரண்டாம் அமைச்சர் மாலிக்கி ஒஸ்மான் கூறியுள்ளார். மெய்நிகர் வாயிலாக நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றில் கலந்துகொண்ட பிறகு டாக்டர் மாலிக்கி அவ்வாறு சொன்னார்.
'அப்லிஃப்ட்' செயற்குழுவின் பங்காளிகளுடன் இந்தக் கலந்துரையாடல் நடைபெற்றது. வசதி குறைந்த மாணவர்களுக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் உதவும் நோக்குடன் பல அமைப்புகள் இடம்பெறும் இந்த செயற்குழு 2018ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த ஏற்பாட்டின்கீழ் அரசாங்க அமைப்புகள், சமூக சேவை அமைப்புகள் உள்ளிட்ட 50க்கும் அதிகமான அமைப்புகளைச் சேர்ந்த பங்காளிகள் மாணவர்களுக்குக் உதவியுள்ளனர். மாணவர்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டதுடன் அவர்களுக்குக் கைகொடுக்க தொண்டூழியர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
"வீட்டுச் சூழல், பிள்ளைகளுக்குக் கற்றுத்தரும் நற்குணங்கள், அவர்களிடையே வளர்க்கும் நற்பண்புகள் போன்றவற்றின் மூலம் ஒரு குழந்தையின் வளர்ச்சிக்குப் பெற்றோர் வகிக்கும் பெரும் பங்கே பலர் அதிகமாகக் குறிப்பிட்ட முக்கிய அம்சம்," என்று டாக்டர் மாலிக்கி சுட்டினார்.
கடந்த நவம்பர் மாதம் அறிவித்ததற்கு ஏற்றவாறு வசதி குறைந்த மாணவர்களுக்குக் கூடுதல் ஆதரவு வழங்குவதற்கு 'அப்லிஃப்ட்' பலன்களை மேம்படுத்த அரசாங்கம் வகைசெய்யும் என்று டாக்டர் மாலிக்கி சொன்னார்.

