கைவிடும் இளம் வழக்கறிஞர்கள்
ஐந்து ஆண்டுகளுக்கும் குறைவான காலத்திற்கு வழக்கறிஞர்களாகப் பணியாற்றிய சுமார் 310 பேர் சென்ற ஆண்டு இத்துறையைவிட்டு வெளியேறினர். இது, இளம் வழக்கறிஞர்களின் மொத்த எண்ணிக்கையில் 14 விழுக்காடு. அப்படியென்றால் இந்தப் பிரிவினரிடையே சென்ற ஆண்டு ஏழில் ஒருவர் வழக்கறிஞராக வேலை செய்வதை நிறுத்தியிருக்கிறார்.
சென்ற ஆண்டு இதுவரை காணாத எண்ணிக்கையில் இளம் வழக்கறிஞர்கள் தொழிலைவிட்டு வெளியேறினர். அவர்கள் மூளைச் சோர்வுக்கு ஆளானது இதற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது.
இந்த விவகாரம் குறித்து சிங்கப்பூர் வழக்கறிஞர்கள் சங்கம் ஆராயப்போவதாக அதன் புதிய தலைவரான ஏட்ரியன் டான் கடந்த திங்கட்கிழமையன்று நடைபெற்ற சட்ட ஆண்டின் தொடக்கச் சடங்கில் கூறினார்.
குற்றம் புரிந்ததாகத் தவறாகக் கருதப்பட்ட தொழிலதிபர்
தான்தான் பென்ட்லி வாகனத்தில் பள்ளியின் பாதுகாவல் அதிகாரியை மோத முயன்றதாக சிலர் தவறாக எண்ணியதைத் தொடர்ந்து திரு நியோ தியாம் டிங்கிற்கு (படம்) மூன்று நாள்களாக சுமார் 200 தொலைபேசி அழைப்புகளும் குறுந்தகவல்களும் வந்த வண்ணம் இருந்திருக்கிறது. 51 வயது திரு நியோ, வாகன விநியோக நிறுவனமான திங்க்ஒன்னின் இயக்குநர். இந்த விவகாரத்தால் தனது நிறுவனங்கள், தனக்குத் தொடர்புடைய இதர அமைப்புகள் ஆகியவையும் ஈடுபடுத்தப்பட்டதாக இவர் தெரிவித்தார்.
தான் தவறாக அடையாளம் காணப்பட்டதால் திரு நியோவிற்குக் குடும்பத்திலும் வர்த்தக ரீதியாகவும் பிரச்சினைகள் எழுந்தன. அங்கீகரிக்கப்படாத இணையத்தளங்களில் பொய்த் தகவல்களும் இடம்பெற்றன. பலர் இவருக்கு எதிராக மரியாதையின்றி கண்டனம் தெரிவித்திருக்கின்றனர். அதனால் காவல்துறையிடம் புகார் கொடுத்திருக்கிறார். காவல்துறையினர் இதை உறுதிப்படுத்தியுள்ளனர்.
உறவை மறுவுறுதிப்படுத்திக்கொண்ட சிங்கப்பூர், சவூதி அரேபியா
சிங்கப்பூரும் சவூதி அரேபியாவும் தங்களுக்கு இடையிலான நீண்டகால உறவை மறுவுறுதிப்படுத்திக்கொண்டுள்ளன. சவூதி அரேபியாவின் வெளியுறவு அமைச்சர் இளவரசர் ஃபைசால் ஃபார்ஹான் அல் சவுத் சிங்கப்பூருக்கு அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டார். சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணனின் அழைப்பை ஏற்று அவர் வருகை தந்தார்.
சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்கோப், பிரதமர் லீ சியன் லூங் ஆகியோரையும் இளவரசர் ஃபைசால் இஸ்தானா மாளிகையில் சந்தித்தார்.
சிங்கப்பூரும் சவூதி அரேபியாவும் தங்களுக்கிடையிலான அரசதந்திர உறவின் 45ஆம் ஆண்டு நிறைவை இவ்வாண்டு கொண்டாடுகின்றன. ஹஜ்ஜு புனிதப் பயணம் குறித்த விவகாரத்தை சவூதி அரேபியா கையாண்ட விதத்திற்கு அதிபர் ஹலிமா அந்நாட்டைப் பாராட்டினார்.
கிருமித்தொற்று விகிதம் குறைந்தது
சிங்கப்பூரில் நேற்று முன்தின நிலவரப்படி வாராந்திர கொவிட்-19 கிருமித்தொற்று விகிதம் 1.43க்குக் குறைந்தது. புதிய ஓமிக்ரான் வகை கொவிட்-19 கிருமித்தொற்று சம்பவங்களின் எண்ணிக்கையும் கடந்த புதன்கிழமை பதிவானதைக் காட்டிலும் குறைவு என்று சுகாதார அமைச்சு தினமும் அதன் இணையத்தளத்தில் வெளியிடும் தகவல்களில் தெரிவிக்கப்பட்டது.
நேற்று முன்தினம் மொத்தம் 960 பேருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டது. இவர்களில் 479 பேர் வெளிநாடுகளிலிருந்து வந்த பயணிகள். 481 பேருக்கு உள்ளூரில் கிருமித்தொற்று ஏற்பட்டது.
549 பேர் ஓமிக்ரான் வகை கிருமித்தொற்றுக்கு ஆளாயினர். இவர்களில் 183 பேர் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள். கிருமித்தொற்றுக்கு ஆளானோரில் புதிதாக யாரும் மரணமடையவில்லை.

