'இப்போதைக்கு அரசியல் சாரா பிரமுகரையே ஆசியான் கூட்டத்திற்கு அழைக்க வேண்டும்'
ஆசியான் அமைப்பில் இடம்பெற்றுள்ள மியன்மார், ஐந்து அம்ச இணக்கம் ஒன்றை அமலாக்க வேண்டும் என்று அந்த 10 நாடுகள் அமைப்பு 2021ல் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியது.
ஆனால் மியன்மார் அந்த இணக்கத்தை நடைமுறைப்படுத்துவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைச் சாதிக்கவில்லை என்று ஆசியானின் தலைமைப் பொறுப்பை இப்போது ஏற்றிருக்கும் கம்போடியாவிடம் பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்து உள்ளார்.
கணிசமான அளவுக்கு முன்னேற்றம் ஏற்படும்வரை அரசியல் சாராத மியன்மார் பிரமுகருக்கு மட்டுமே ஆசியான் கூட்டங்களில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட வேண்டும் என்று திரு லீ, கம்போடிய பிரதமர் ஹுன் சென்னிடம் கூறினார்.
திரு ஹுன் சென் வெள்ளிக்கிழமை காணொளி மூலம் பிரதமரை அழைத்துப் பேசினார். ஆசியான் தலைவர் என்ற முறையில் இந்த ஆண்டில், தான் முன்னுரிமை அளிக்க இருக்கும் அம்சங்கள் பற்றி அவர் திரு லீயிடம் எடுத்துக் கூறினார்.
ஆசியானின் தலைவராக பொறுப்பு ஏற்றுக்கொண்டுள்ள கம்போடியாவுக்கான தனது ஆதரவை பிரதமர் லீ அப்போது மறுஉறுதிப்படுத்தினார் என்று சிங்கப்பூரின் வெளியுறவு அமைச்சு தெரிவித்தது.
அண்மையில் மியன்மார் சென்று வந்தது பற்றி திரு ஹுன் சென் தன்னிடம் விளக்கியதற்காக பிரதமர் லீ அவருக்கு நன்றி தெரிவித்ததாகவும் அமைச்சு கூறியது.
கம்போடிய பிரதமர் ஜனவரி 7, 8ஆம் தேதிகளில் மியன்மார் சென்று அந்த நாட்டின் மூத்த ஜெனரல் மின் ஆங் லைங்கை சந்தித்தார். மியன்மாரில் ஓராண்டுக்கு முன் புரட்சி மூலம் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது.
ஆசியான் தலைவர்களும் மியன்மாரின் மூத்த ஜெனரல் மின் ஆங் லைங்கும் 2021 ஏப்ரல் 24ஆம் தேதி ஜகார்த்தாவில் கூட்டம் நடத்தினர்.
அப்போது அந்த ஐந்து அம்ச இணக்கம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
மியன்மாரில் வன்செயல் முடிவுக்கு வர வேண்டும். மியன்மாருக்கு மனிதாபிமான உதவி வழங்கப்பட வேண்டும்.
ஆசியான் சிறப்புத் தூதர் ஒருவர் உதவியுடன் எல்லா தரப்புகளையும் உள்ளடக்கிய பேச்சுவார்த்தை நடக்க வேண்டும் என்று அந்த இணக்கம் அழைப்பு விடுத்தது.
அந்த ஐந்து அம்ச இணக்கத்தை நடைமுறைப்படுத்துவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படும் வரை ஆசியான் கூட்டங்களுக்கு மியன்மாரில் இருந்து அரசியல் சாராத பிரமுகரை மட்டுமே அழைக்க வேண்டும் என்று ஆசியானின் 38வது மற்றும் 39வது உச்சநிலை சந்திப்புகளில் முடிவு எடுக்கப்பட்டது.
மியன்மாரில் குறிப்பிடத்தக்க அளவுக்கு முன்னேற்றம் ஏற்படும் வரை இந்த முடிவை ஆசியான் பின்பற்றி வரவேண்டும் என்று பிரதமர் லீ, கம்போடிய பிரதமரிடம் தெரிவித்துள்ளார்.

