சீனப் புத்தாண்டு நெருங்கும் வேளையில், சமூக உண்டியல் அமைப்பு முதியோருக்கும் உதவி தேவைப்படும் குடும்பங்களுக்கும் 8,100க்கும் மேற்பட்ட விழாக்கால அன்பளிப்புப் பைகளை விநியோகிக்கும்.
'அதிர்ஷ்டப் பை' என்று குறிப்பிடப்படும் அந்த அன்பளிப்புப் பைகளில் உணவுப்பொருள்கள், குடும்பத்திற்குத் தேவையான அத்தியாவசிப் பொருள்கள் இருக்கும்.
அந்தப் பைகளில் பல்வேறு பொருள்களையும் சேர்ப்பதில் 1,150க்கும் மேற்பட்ட தொண்டூழியர்கள் உதவினார்கள்.
சமூக உண்டியல், 'ஹார்ட்வார்மர்ஸ்' என்ற தொண்டூழிய அமைப்புடன் சேர்ந்து இந்த உதவியை செய்து வருகிறது. சென்ற ஆண்டில் 6,700 அன்பளிப்புப் பைகள் வழங்கப்பட்டன.
தேசிய சமூக சேவை மன்றம் என்ற அமைப்பு சிங்கப்பூரில் செயல்படும் சமூக சேவை அமைப்புகளை ஒருமுகப்படுத்துகிறது. இந்த மன்றத்தின் நிதி திரட்டும் பிரிவாக சமூக உண்டியல் செயல்படுகிறது.
மரினா பே சேண்ட்ஸ் கண்காட்சி மற்றும் மாநாட்டு மையத்தில் நேற்று நடந்த ஒரு நிகழ்ச்சியில் அன்பளிப்புப் பை விநியோகம் அதிகாரபூர்வமாகத் தொடங்கியது. மூத்த அமைச்சர் டியோ சீ ஹியன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
தெம்பனிஸ் தொகுதியில் பல குடும்பங்களுக்கும் அன்பளிப்புப் பைகளை குடும்ப, சமுதாய மேம்பாட்டு அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி வழங்கினார்.
இந்த ஆண்டின் அன்பளிப்புப் பை திட்டத்தின்கீழ் சமூக உண்டியல் $2.8 மில்லியனுக்கும் அதிகத் தொகையை திரட்டி இருக்கிறது.
இந்த உண்டியல் 100க்கும் மேற்பட்ட சமூகச் சேவை அமைப்புகளையும் 200க்கும் மேற்பட்ட செயல்திட்டங்களையும் நடைமுறைப்படுத்தி வருகிறது.
அவற்றின் மூலம் 41,000க்கும் மேற்பட்டவர்கள் பயன் அடைகிறார்கள். இதற்காக ஆண்டுதோறும் அந்த உண்டியலுக்கு $50 மில்லியனுக்கும் அதிகத் தொகை தேவைப்படுகிறது.

