அடுத்த தொற்றுநோயைச் சமாளிக்க சிங்கப்பூர் ஆயத்தமாகும் வேளையில், நான்கு முக்கிய கேள்விகளை மனதில் கொள்ள வேண்டும் என்று வெள்ளிக்கிழமை சுகாதார அமைச்சர் ஓங் யி காங் தெரிவித்தார்.
நோய் எந்த வேகத்தில் பரவும் என்பது அவற்றில் ஒரு கேள்வி. நோயால் பாதிக்கப்படாமல் மக்களை எப்படி பாதுகாக்க முடியும் என்பது ஒரு பிரச்சினையாக இருக்கும். இது தடுப்பூசியுடன் தொடர்புடைய ஒன்றாக இருக்கும். மிகவும் நோய்வாய்ப்பட்டவர்களைச் சுகாதாரப் பராமரிப்பு முறை எப்படி சமாளிக்க முடியும் என்ற கேள்வியும் எழும்.
தொற்று காரணமாக மருத்துவம் சாராத உள்கட்டமைப்பு வசதி களில் தாக்கங்கள் எந்த அளவுக்கு இருக்கும் என்பதை நாடுகள் பரிசீலிக்க வேண்டி இருக்கும் என்று அமைச்சர் தெரிவித்தார்.
நகர சூழலில் சுகாதார அவசரகால ஆயத்த நிலையைப் பலப்படுத்துவது தொடர்பில் உலக சுகாதார நிறுவனம் கூட்டாக ஏற்பாடு செய்த தகவல் கருத்தரங்கம் ஒன்றில் அமைச்சர் பேசினார்.
தொற்றுநோய் ஏற்படும்போது அதைச் சமாளிக்கத் தேவையான நடைமுறையை 2003ல் சார்ஸ் நெருக்கடி ஏற்பட்டபோது சிங்கப்பூர் உருவாக்கியது.
ஆனால் கொவிட்-19 தலைகாட்டியபோது அந்த நடைமுறை போதாது என்பதை சிங்கப்பூர் கண்டுகொண்டது என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

