தற்கொலை பற்றிய விழிப்புணர்வு மற்றும் முயன்றால் முடியாதது ஒன்றுமில்லை என்ற கருத்தை மையமாக வைத்துத் தயாரித்த 'அறி' என்ற குறும்படத்தின் விளம்பரத் தட்டியை, சிங்கப்பூர் இந்தியக் கலைஞர் சங்கத்தின் தலைவர் திரு குணசீலன் இம்மாதம் ஒன்பதாம் தேதியன்று வெளியிட, அந்தக் குறும்படத்தின் இயக்குநர் மில்லத் அகமது பெற்றுக்கொண்டார். மாட்டுப் பொங்கலான நேற்று இந்தக் குறும்படத்தை அதிகாரபூர்வமாக மில்லத் வீடியோ சர்வீஸ் என்ற யூடியூப் ஒளியலையில் திரு குணசீலன் வெளியிட்டார்.
"ஏழு நிமிடத்தில் தனி ஒரு கதாபாத்திரமாக, வசனம் பேசாமல், தன் முகப் பாவனைகள் மூலம் மிக சிறப்பாக நடித்து ஒரு நல்ல கருத்தை மக்களுக்குச் சொல்லியிருக்கிறார். இக்குறும்படம் சில விருதுகளைப் பெற்றதோடு உலக சாதனையும் செய்துள்ளது. சிங்கப்பூர் இந்தியக் கலைஞர் சங்கத்தின் மூலம் எங்கள் வாழ்த்துகளைக் கூறி மகிழ்கிறோம்," என்றார் திரு குணசீலன். குறும்படத்திற்கு வசனம் பேசிய கவிஞர் பானு சுரேஷ், மோனலிசா, அஃபீஃபா, சியா லிம், இசையமைத்த பால் மற்றும் ஒளிப்பதிவு செய்த அலிஃப் அஹ்மது ஆகியோருக்கு இயக்குநர் நன்றி தெரிவித்தார்.
'அறி' என்ற தன்முனைப்புக் குறும்படத்தில் ஒரே ஒரு கதாபாத்திரத்தை ஏற்று நடித்ததோடு மட்டுமின்றி ஒப்பனை, உடைகள், கலை, உதவி ஒளிப்பதிவு, பிண்ணனிக் குரல், படத்தொகுப்பு, வசன வரிகள், தயாரிப்பு, வரைகலை, ஒலிக்கலவை, கதை, திரைக்கதை, வசனம், பாடல், தயாரிப்பு, இயக்கம் என 16 பொறுப்புகளை மில்லத் அகமது ஏற்ற குறும்படம் என்று கலாம் உலகச் சாதனை புத்தகம் கடந்த அக்டோபர் மாதம் 25ஆம் தேதியன்று பதிவுசெய்து அங்கீகாரம் வழங்கியது.

