சிங்கப்பூரின் தென்மேற்குப் பகுதி யில் செயல்படும் நூல் வாசிப்பு முகப்புகளுக்கும் 14 சமூக நூல கங்களுக்கும் பழைய புத்தகங்களை அன்பளிப்பாகக் கொடுத்து சிங்கப்பூரர்கள் ஒரு புத்தகத்திற்கு 5 காசு பெறலாம்.
'தென்மேற்கில் உங்கள் புத்தகங்களைப் பகிர்ந்துகொள்ளுங்கள்' என்ற ஒரு திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது.
தென்மேற்கு சமூக மேம்பாட்டு மன்றம் அறிமுகப்படுத்தி இருக்கும் அந்தத் திட்டம், சமூக நூல் வாசிப்பு நிலையங்களுக்குப் புத்தகங்களை மக்கள் வழங்க ஊக்கமூட்டுகிறது.
அத்திட்டத்தின்படி, சிங்கப்பூரர்கள் பழைய புத்தகங்களைக் கொடுத்து மறுசுழற்சிப் புள்ளி களைச் செயலியில் பெறலாம். அவற்றைப் பணமாக்கலாம்.
தென்மேற்கு சமூக மேம்பாட்டு மன்றம் பல்வேறு சுற்றுச்சூழல் செயல் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது.
அவற்றில் ஆகப் புதிய திட்டமாக இது இடம் பெறுகிறது. தென் மேற்குச் சுற்றுச்சூழல் பெருந்திட்டத்தின் ஒரு பகுதியாக அறவே விரயம் அற்ற நிலையைச் சாதிக்க வேண்டும் என்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
'தென்மேற்கைத் தூய்மைப்படுத்துவோம்' என்ற ஒரு நிகழ்ச்சி நேற்று ஹில்வியூ சமூக மன்றத்தில் நடந்தது. வர்த்தக தொழில் அமைச்சர் கான் கிம் யோங் அதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
அப்போது அமைச்சர், 'தென் மேற்கில் உங்கள் புத்தகங்களைப் பகிர்ந்துகொள்ளுங்கள்' திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், சுற்றுச்சூழலுக்கு உகந்த செயல்களைச் சமூகத்தில் ஏற்படுத்த நிறுவனங்களும் அரசாங்க அமைப்புகளும் சேர்ந்து செயல்படுவதைக் காண்பது மகிழ்ச்சி தருவதாகத் தெரிவித்தார்.
தேசிய நிலையில் இடம்பெறக்கூடிய முயற்சிகளுக்கு ஒவ்வொரு வரும் உறுதுணையாகத் திகழ முடியும் என்று அவர் கூறினார்.
இதனிடையே, தென்மேற்கு சமூக மேம்பாட்டு மன்றம் நடைமுறைப்படுத்தும் சுற்றுச்சூழல் பெருந்திட்டத்தின் ஒரு பகுதியாக, அந்த மாவட்டம் இப்போது 53 மறுசுழற்சிப் புள்ளிகளைப் பெற்றுள்ளது. சென்ற ஆண்டு முடிவில் அது 979 டன் மறுசுழற்சிப் பொருட்களைச் சேகரித்தது.
இது 16,500க்கும் மேற்பட்ட மரங்களைக் காப்பாற்றியதற்குச் சமமானது என்று தென்மேற்கு மாவட்ட மேயர் திருவாட்டி லோ யென் லிங் கூறினார்.
''தென்மேற்கு மாவட்டத்தைப் பொறுத்தவரை சுற்றுச்சூழலைப் பேணுவதில் கடந்த பல ஆண்டுகளாகவே முத்திரை பதிக்கப்பட்டுள்ளது. இதைப் பொறுத்தவரை மேலும் பலவற்றைச் சாதிக்க நாங்கள் கடப்பாடு கொண்டுள்ளோம்,'' என்றார் திருவாட்டி லோ.
தென்மேற்கு மாவட்டத்தில் மூன்று ஆண்டுகளுக்கு முன் பழைய மின்னியல் பொருள்களைச் சேகரிப்பதற்கான கூடங்கள் அமைக்கப்பட்டன. அது முதல் 11.6 டன் பழைய கழிவுப் பொருள்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.

