தொற்று காரணமாக பொருள்கள் வரத்து தாமதமாகலாம்
உலகில் பொருள் சேவை விநியோகக் கட்டமைப்பு ஏற்கெனவே பாதிக்கப்பட்ட நிலையில் இருந்து வருகிறது. அந்தக் கட்டமைப்பு இந்த ஆண்டில் மீண்டு விடும் என்று நம்பப்படுகிறது. இவ்வேளையில், உலகம் முழுவதும் புதிதாக கொரோனா தொற்று தலையெடுப்பதால் அந்த நம்பிக்கை மங்கிவிடக்கூடிய வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.
இது ஒருபுறம் இருக்க, பிப்ரவரி 1ஆம் தேதி சீனப் பெருநாள் கொண்டாடப்படும் நேரத்தில் பொருள்களுக்குப் பற்றாக்குறை ஏற்படும் வாய்ப்பும் பணவீக்கம் உயரும் வாய்ப்பும் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
''கிறிஸ்மஸ் கொண்டாட்ட காலத்தின்போது தொற்று காரணமாக உலக பொருள் சேவை விநியோகம் பாதிக்கப்பட்டதைப் பார்த்தோம். அதேபோல் வரும் சீனப்புத்தாண்டு காலத்தில் தருவிப்பு ஆணைகள் அதிகமானால் அது வியப்பாக இராது,'' என்று டிஎம்எக்ஸ் ஆசியா நிறுவனத்தில் பொருள் சேவை விநியோகக் கட்டமைப்பு வல்லுநரான ஜேம்ஸ் கிறிஸ்டோபர் தெரிவித்தார்.
ஓமிக்ரான் கிருமித்தொற்று சனிக்கிழமை குறைந்தது
சிங்கப்பூரில் சனிக்கிழமை புதிதாக 692 பேருக்கு ஓமிக்ரான் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாக சுகாதார அமைச்சு கூறியது. இந்த எண்ணிக்கை அதற்கு முந்தைய நாளன்று 832 ஆக இருந்தது. அவர்களில் 541 பேர் உள்ளூரைச் சேர்ந்தவர்கள். 151 பேர் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள்.
மொத்தம் 956 பேருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று உறுதியானது. அவர்களில் 552 பேர் உள்ளூர் மக்கள். 404 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள்.
இந்த எண்ணிக்கை வெள்ளிக்கிழமை 945 ஆக இருந்தது. புதிதாக மூவர் மரணமடைந்துவிட்டனர். மொத்த மரண எண்ணிக்கை 843 ஆகியது. வாராந்திர கிருமித் தொற்று அதிகரிப்பு விகிதம் சனிக்கிழமை 1.47 ஆகக் கூடியது. சிங்கப்பூரில் கொரோனா தொற்றியோரின் மொத்த எண்ணிக்கை சனிக்கிழமை நிலவரப்படி 290,986. மருத்துவமனையில் 181 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தீவிர சிகிச்சைப் பிரிவில் 12 பேர் உள்ளனர்.
சிங்கப்பூரில் தடுப்பூசி போட்டுக்கொள்ள தகுதி பெற்றுள்ளவர்களில் மொத்தம் 91 விழுக்காட்டினர் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டிருந்தனர். ஏறத்தாழ 51 விழுக்காட்டினர் கூடுதல் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
சீர்திருத்த கட்சித் தலைவர் சார்ல்ஸ் இயோ கைது
சீர்திருத்தக் கட்சியின் தலைவரான சார்ல்ஸ் இயோ, நம்பிக்கை மோசடி, தில்லுமுல்லு ஆகியவற்றில் ஈடுபட்டு இருப்பதாகக் கூறப்படுவதை அடுத்து அவர் புதன்கிழமை கைதானதாக காவல்துறை சனிக்கிழமை தெரிவித்தது.
தனக்கு எதிரான புலன்விசாரணைகள் அரசியல் நோக்கம் கொண்டவை என்று திரு இயோ கூறியதை காவல் துறை திட்டவட்டமாக நிராகரித்துவிட்டது.
திரு இயோ, குற்றவியல் தற்காப்பு வழக்கறிஞராக பணியாற்றும் 'வொயிட்ஃபீல்ட் லா கார்ப்பரேஷன்' என்ற நிறுவனத்திற்கு எதிராக புலன்விசாரணை நடந்து வருவதாக காவல்துறை உறுதிபடத் தெரிவித்தது. அந்த நிறுவனத்திற்கு எதிராக காவல் துறையில் புகார் செய்யப்பட்டதை அடுத்து புதன்கிழமை வேறு ஓர் ஆடவரும் கைதான தாகத் தெரிவிக்கப்பட்டது.
வொயிட்ஃபீல்ட் லா கார்ப்பரேஷன் நிறுவனத்தின் வெவ்வேறான நான்கு வாடிக்கையாளர்கள் தொடர்பில் நான்கு புகார்கள் தாக்கலானதாக தெரிவித்த காவல்துறை, அந்தப் புகார்கள், தில்லுமுல்லு மற்றும் அல்லது நம்பிக்கை மோசடி சம்பந்தப்பட்டவை என்றும் கூறியது.
திரு இயோ, 2020 பொதுத் தேர்தலில் ஆங் மோ கியோ குழுத்தொகுதியில் போட்டியிட்ட சீர்திருத்தக் கட்சி வேட்பாளர்களில் ஒருவராக இருந்தார். பிரதமர் தலைமையிலான மக்கள் செயல் கட்சி அணியை எதிர்த்து அது தோற்றது.

