நமது லட்சியத்தை அடையும் பயணத்தில் தடைகள் நூறு வந்தாலும் நம்மிடம் உள்ள மனவலிமையும் நம்பிக்கையும் நம்மைத் தொடர்ந்து நடைபோட வைக்கும். இன்றைய இளையர் முரசில் இடம்பெற்று இருக்கும் இளையர்கள் இவ்வாறு தடைகள் பல கடந்து லட்சியப் பாதையில் பயணம் செய்பவர்கள். நமது லட்சியத்தைச் சற்று நமக்கே நினைவூட்டும் கதைகள் இவை.
தன்னைப் பற்றி தானே அறிந்திருந்ததால் சுய புரிதலின் மூலம் தனக்குத் தரப்படும் பணிகளைச் செவ்வனே செய்ய முடிந்ததாக சுவிஸ் காட்டேஜ் உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த ருஷில் ஸ்ரீநாத் தெரிவித்தார்.
பொதுக்கல்விச் சான்றிதழ் சாதாரண நிலைத் தேர்வில் அனைத்துப் பாடங்களிலுமே உச்சத் தேர்ச்சியான 'ஏ1' பெற்ற ருஷில், இந்தத் தேர்ச்சியை எதிர்பார்க்கவில்லை என்று புன்னகையுடன் தமிழ் முரசிடம் தெரிவித்தார்.
கிருமிப் பரவல் தொடங்கிய காலகட்டத்தில் இல்லம் சார்ந்த கற்றலைப் பள்ளிகள் நடைமுறைப்படுத்தின. அதனால் ஏற்பட்ட பல மாற்றங்களால் தான் அசௌகர்யத்தை உணர்ந்ததாகக் கூறினார் ருஷில்.
"மாற்றத்திற்கு ஏற்ப நாம் அனைவரும் மாறிக்கொண்டோம். கற்றல் செயலிகள் மூலம் மாணவர்களின் சிக்கல்களுக்கு ஆசிரியர்கள் தீர்வு கண்டனர்," என்று அவர் கூறினார்.
உயிரியல், ரசாயனப் பாடங்களை விரும்பிப் படிப்பதாகக் கூறும் ருஷில், கிருமிப் பரவலைப் பற்றி தான் படித்த தகவல்கள் அந்த ஆர்வத்தை அதிகப்படுத்தியதாகக் கூறினார்.
"தடுப்பூசியின் ஆற்றலை பள்ளிப்பாடங்களின் மூலம் அறிந்துகொள்வதால் கற்றல் மேலும் சுவாரசியமாகிறது," என்றார் அவர்.
தமிழ்ப் பாடத்திற்கு அதிக முயற்சி எடுக்க வேண்டி இருந்ததாகக் கூறிய ஸ்ரீநாத், தமிழ் ஆசிரியர் திரு அப்துல் நசீர், தமிழ் துணைப்பாட ஆசிரியர் குமாரி காயத்திரி ஆகியோரிடம் அடிக்கடி தனது சந்தேகங்களைக் கேட்டுத் தெளிந்ததாகக் கூறினார்.
"தொடக்கப்பள்ளியில் தமிழ் மொழிக்கான எனது அடித்தளம் வலுவாக இல்லாததால் உயர்நிலைப்பள்ளியில் கூடுதல் முயற்சி எடுக்க வேண்டி இருந்தது. என் ஆசிரியர்கள் இதனைப் புரிந்துகொண்டு சிறந்த முறையில் எனக்கு வழிகாட்டினர்," என்று அவர் கூறினார்.
பள்ளிப் பாட்டுக் குழுவின் செயற்குழு உறுப்பினரான ருஷில், மாணவர்களுக்கு வழிகாட்டும் பொறுப்பையும் ஏற்றிருந்தார். மேலும், பல்வேறு இணைப்பாட நடவடிக்கைகளில் இருந்த அவர், நேர நிர்வாகத்தில் வல்லவராகவும் இருக்கிறார்.
"கால அட்டவணை முறையைப் பயன்படுத்துவேன். அதே நேரத்தில் எப்போது ஓய்வு தேவை என்பதை உணர்ந்து அதற்கு ஏற்ப வேலைகளை முடித்திட அறிந்துகொண்டேன்.
"நமது உடலின் ஆற்றலுக்கு மீறி உழைக்கும்போது சோர்வு தட்டும். இது சில முக்கியமான தருணங்களில் நமக்குப் பாதகமாக அமையலாம். ஆழமாகப் பாடங்களைப் படிப்பது எவ்வளவு முக்கியமோ, அவ்வளவுக்கு தேர்வு நேரத்தில் விழிப்பு நிலையையும் நிதானத்தையும் காப்பதும் அவசியம்," என்று அவர் கூறுகிறார்.
தன்னுடன் நண்பர்கள் போன்று பழகி அன்புடன் பார்த்துக்கொண்டு மகிழ்ச்சிப்படுத்திய தன்னுடைய பெற்றோரின் மூலம் அமைதி அடைவதாகக் கூறும் ருஷில், அவர்களுக்கு நன்றி கூற விரும்பு வதாகவும் தெரிவித்தார். தொடக்கக் கல்லூரிக்குச் செல்ல விரும்பும் ருஷில், வருங்காலத்தில் மருத்துவர் அல்லது ஆசிரியராக இருக்க ஆசைப்படுகிறார்.
உயர்நிலை ஒன்றில் வழக்கநிலை ஏட்டுக்கல்விப் பாதையில் இணைந்த பாஸ்கர் ஸ்ருதி, விரைவு நிலைக்கு மாறவேண்டும் என்ற மனஉறுதியுடன் செயல்பட்டார்.
சாதாரண நிலைத் தேர்வில் 15 புள்ளிகளைப் பெற்றுள்ள இவர், தனது அடுத்த இலக்காக தொடக்கக் கல்லூரிக்குச் செல்வதைக் குறிவைத்துள்ளார்.
தனது முதல் வெற்றிக்கான காரணம், தளராத நம்பிக்கையே என்றார் ஸ்ருதி. சுவிஸ் காட்டேஜ் உயர்நிலைப்பள்ளியின் விரைவு நிலையில் பயில, ஸ்ருதியின் தொடக்கப்பள்ளி ஆண்டிறுதித் தேர்வு முடிவுகள் தகுதிபெறவில்லை.
"சுவிஸ் காட்டெஜ் பள்ளியின் விரைவு நிலையில் சேர்வதே எனது முதல் கனவாக இருந்தது. அது தோல்வி அடைந்தபோதும் நான் என் கனவைக் கைவிடவில்லை," என்று அவர் கூறினார்.
இலக்கை உறுதிசெய்ததை அடுத்து அதற்குத் தேவைப்படும் வளங்களைத் திரட்டுவது ஸ்ருதியின் அடுத்தகட்ட பணியாக இருந்தது. தமது ஆசையைப் பெற்றோரிடமும் ஆசிரியர்களிடமும் கூறிய ஸ்ருதி, தனக்காகவே ஓர் ஆதரவுக் குழுவை அமைத்துகொள்ள முடிவு செய்தார்.
"பாடங்களில் எழும் சந்தேகங்களை உடனுக்குடன் தெளிவுபடுத்த முற்படுவேன்," என்று அவர் கூறினார். தம் பெற்றோர் பாடங்களுக்கு மட்டும் உதவியதுடன் தனக்கு மனதளவில் பெரும் ஆதரவையும் நல்கினர். தனக்கு நல்ல நண்பர்களும் அமைந்ததால் அனைவருமே சேர்ந்து படித்ததாக ஸ்ருதி கூறினார்.
முன்னேற்றம் தேவைப்படும் பாடங்களில் ஸ்ருதி அடிக்கடி பயிற்சி செய்து வந்தார். தொடக்கத்தில் கணிதப் பாடத்தில் சற்று பின்தங்கி இருந்த ஸ்ருதி, இறுதியில் 'ஏ' மதிப்பெண் பெற்றது தனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்ததாக அவர் கூறினார்.
"நான் தொடர்ந்து பயிற்சி செய்தேன். தொடக்கத்தில் முன்னேற்றம் சிறிதளவே இருந்தபோதும் மனம் தளரவில்லை. இறுதியில் இந்த மதிப்பெண் வாங்கியதில் முழுமையான திருப்தி எனக்கு ஏற்பட்டுள்ளது," என்று அவர் கூறினார். வருங்காலத்தில் வர்த்தக ஆய்வாளராகப் பணிபுரிய ஆசைப்படும் ஸ்ருதி, படிப்பதில் இன்பம் காண்பதாகக் கூறினார்.
செய்தி: கி. ஜனார்த்தனன்